ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் நடத்தாமல் மற்ற நாட்களில் நடத்த நடவடிக்கை எடுத்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனுக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.சிவகங்கை லோக்சபா தேர்தலோடு மானாமதுரை சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பணிகளில் அரசு ஆசிரியர்கள் பயன்படுத்த பட உள்ளனர்.தேர்தலுக்கு முன் அவர்களுக்கு தேர்தல் தொடர்பான கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதால் ஆசிரியர்கள் அன்று ஒரு நாள் மட்டும் தான் ஓய்வு எடுத்து வரும் வேளையில் அன்றைய தினம் கூட்டம் நடப்பதால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று கூட்டம் நடத்தாமல் வருகிற 30 ந் தேதி சனிக்கிழமையும்,அடுத்த மாதம் 5 ந் தேதி வெள்ளிக்கிழமையும் மட்டும் தேர்தல் கூட்டம் நடத்த மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்திருப்பதால் அவருக்கு சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.
இது குறித்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தான் தேர்தல் கூட்டங்களை நடத்துகின்றனர், ஆனால் சிவகங்கை மாவட்ட கலெக்டரும்,தேர்தல் அதிகாரியுமான ஜெயகாந்தன் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் தேர்தல் கூட்டம் நடத்த முடிவெடுத்ததற்கு ஆசிரியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.