. -->

Now Online

FLASH NEWS


Thursday 4 April 2019

ஆதார் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு சட்டத்திற்கு விரோதமானது - ஆசிரியை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!








ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு எதிரான வழக்கில், அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
   
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை ரத்துசெய்யக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து, 2018 அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னல் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறவும், மானிய உதவிகளைப் பெறவும் மட்டும் ஆதாரை பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்திலும் இந்த விதிகள் உள்ளன. இதை மீறி, வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. அடிப்படை உரிமையான அந்தரங்க உரிமையை மீறிய செயல் என்று ஆசிரியை அன்னல் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.