. -->

Now Online

FLASH NEWS


Wednesday 15 May 2019

ஏ.ஐ.சி.டி.இ-யின் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்

ஏ.ஐ.சி.டி.இ-யின் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 47 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 24 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 13 தன்னாட்சி மற்றும் 336 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், கடந்த மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தொழிற் படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், பல தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதி, போதுமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, ஏ.ஐ.சி.டி.இ-யின் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் 2019-2020 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் கல்லூரிகளின் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் அங்கீகாரம் இல்லாமல் சேர்க்கப்படும் மாணவர்கள், செமஸ்டர் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பாலிடெக்னிக் கல்லூரிகளும் ஏ.ஐ.சி.டி.இ-யின் உரிய அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.