. -->

Now Online

FLASH NEWS


Saturday 18 May 2019

பல ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு : சம்பளம் போடுவதில் அதிகாரிகள் குளறுபடி







மத்திய அரசின் சமக்ர சிக்‌ஷா திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதாமாதம் சம்பளம் போடுவதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியத்தால் பல ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்டம்(எஸ்எஸ்ஏ) கடந்த 2000 ஆண்டு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது.

 தொடக்க கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் 10 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. 2010ம் ஆண்டு இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக மத்திய அரசு மூலம் ஆண்டு தோறும் பலகோடி நிதி வந்து கொண்டு இருக்கிறது.

இதையடுத்து, 2010ம் ஆண்டுக்கு பிறகு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம்(ஆர்எம்எஸ்ஏ) என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதன்படி 9, 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி உள்ளே வந்தது.

 இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு மேலும் ஒரு புதியதாக சமக்ர சிக்‌ஷா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் வந்ததற்கு பிறகு தமிழகத்தில் ஏற்கெனவே இருந்து எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ ஆகிய இரண்டு திட்டங்களும் ஒன்றாக இணைத்து சமக்ர சிக்‌ஷாவின் கீழ் கொண்டு வரப்பட்டது.

முன்னதாக, எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ திட்டங்களில் தற்காலிகப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

 இதன்படி எஸ்எஸ்ஏவில் 1282 இடங்களும், ஆர்எம்எஸ்ஏவில் 8462 இடங்களும் தற்காலிக இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அவர்களும் கடந்த 2011-2012ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான மாத சம்பளம் என்பது ஒவ்வொரு மாதமும் மேற்கண்ட திட்ட அதிகாரிகள் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

 மேற்கண்ட இரண்டு திட்டங்களின் கீழ் செயல்படும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது, அந்த பள்ளிகளில் புதியதாக தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அல்லது அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்த இரண்டையும் அதிகாரிகள் செய்யவில்லை. அதனால் சம்பளம் வழங்கும் போது பட்டியல் தயாரிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.

10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிரந்தர ஆசிரியர்களுக்கு, தற்காலிகப் பணியிடத்துக்கான தொகையை கணக்கிட்டு சம்பளமாக வழங்கி வருகின்றனர்.

இந்த சம்பளம் பல்வேறு கணக்குத் தலைப்புகளில் வழங்கப்படுவதால் யாருக்கு எப்போது சம்பளம் வரும் என்று தெரியாது. அதேபோல அந்த பணியில் இருப்பார்களா என்ற நம்பிக்கையும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் அந்த பணியில் நீடிக்கிறார்களா இல்லையா என்பதை பார்த்த பின்பே அதிகாரிகள் சம்பளம் பட்டியல் தயாரிக்கின்ற நிலை உள்ளது.

அதனால் குறிப்பிட்ட தேதியில் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை.
கடந்த  ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் வழங்க 8462 ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 எஸ்எஸ்ஏ மூலம் பணி அமர்த்தப்பட்ட 1282 பேருக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்க உத்தரவு வரவில்லை. அவர்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வரவில்லை என்று அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர்.

இது போல் சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 50 ஆயிரம் பேர் ஒவ்வொரு மாதம் சம்பளம் பெறவே போராட வேண்டிய நிலை உள்ளது. அதனால் மேற்கண்ட பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி உத்தரவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டு வருகின்றனர்.

இல்லை என்றால் மாதா மாதம் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கினால் இந்த பிரச்னை இருக்காது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் அது குறித்து நடவடிக்க எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் சமக்ர சிக்‌ஷா திட்ட ஆசிரியர்கள் குறித்த தேதியில் சம்பளம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்