. -->

Now Online

FLASH NEWS


Thursday 6 June 2019

ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் உயர்வை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல்

ஆசிரியர் தகுதி தேர்வெழுத எஸ்சி-எஸ்டி பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டுமென்பதை எதிர்த்த மனு தள்ளுபடியானது. இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப். 28ல் வெளியிட்டது.


அதில், எஸ்சி - எஸ்டி பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டத்தை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக்கழகத்தின் விதிப்படி, எஸ்சி - எஸ்டி பிரிவினர் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்ணுடன் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது என கூறப்பட்டிருக்கிறது.


ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டுமென கூறுகின்றனர். இதனால் எஸ்சி - எஸ்டி பிரிவினர் பலர் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். எஸ்சி - எஸ்டி பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்ணுடன் கல்வியியல் பட்டத்தை பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதலாம் என புதிதாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டுமென ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தேன்.


எனது மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவு ஏற்புடையதல்ல. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு பாரபட்சமானது. மதிப்பெண் தகுதியை உயர்த்தியது பாகுபாடு காட்டுவதைப்போல உள்ளது.


எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எஸ்சி - எஸ்டி பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்ணுடன் கல்வியியல் பட்டத்தை பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதலாம் என புதிதாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் மனு மீதான விசாரணையை ஜூன் 6க்கு (இன்று) தள்ளிவைத்தனர்