. -->

Now Online

FLASH NEWS


Friday 28 June 2019

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் ஏசி உட்பட அதிநவீன வசதிகளுடன் அரசு பள்ளி


திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் ஏசி உட்பட அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட அரசுப்பள்ளியை கலெக்டர் திறந்து வைத்தார். இதுபோல் மேலும் 18 பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார். திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளியாக அமைக்க கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முடிவு செய்தார். அதன்படி இந்த பள்ளியானது தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளியாக மாற்றம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், இதன் திறப்புவிழா நேற்று நடந்தது.

விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, பள்ளியை திறந்து வைத்தார். டிஆர்ஓ ரத்தினசாமி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், திட்ட இயக்குனர் ஜெயசுதா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளை பள்ளி மாணவ- மாணவிகள் தொகுத்து வழங்கினர். தொடர்ந்து பள்ளியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புரொஜெக்டர் மூலம் மாணவர்கள் கற்பதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக முன்மாதிரி பள்ளியாக மாற்றம் செய்ய இப்பள்ளியை தேர்வு செய்தோம். அதன்படி ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளியாக இப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது. 30 மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் படித்து வந்த நிலையில், தற்போது கூடுதலாக 23 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டி-சர்ட் போன்ற சீருடைகள், அடையாள அட்டை, காலணி, புத்தக பைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் புரொஜெக்டர், டிவி, இணையதளம், குளிர்சாதன வசதி, இருக்கைகள், அலமாரிகள், அறிவியல் விளையாட்டு உபகரணங்கள் உள்பட அனைத்து வசதிகள் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளியில் உள்ள டிவியில் குழந்தைகளுக்கு பிடித்த அறிவியல் சார்ந்த விலங்குகள் சார்ந்த குறும்படம் ஒளிபரப்பப்படும். தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் அனைத்து வசதிகள் கூடிய மேலும், 18 பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் இப்பள்ளியில் மாணவர்கள் வருகை பதிவேடு பயோ மெட்ரிக் முறையில் செயல்பட உள்ளது. மேலும் உணவு உண்ணும் இடம், காலணிகள் வைக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியாக கழிவறை வசதி, மாணவர்களுக்கு நவீன கழிவறை வசதி, மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ தேவி, மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர், தாசில்தார் மனோகரன், பள்ளி துணை ஆய்வாளர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.