. -->

Now Online

FLASH NEWS


Thursday 13 June 2019

அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்வதை முறையாகச் செயல்படுத்தும் நோக்கில், தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில அளவில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பல்வேறு வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்துவதுடன், கல்வித் தரத்தையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக் கல்வித் துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன், முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசுப் பள்ளிகளையும் தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளிகளுக்கு தாமதமின்றி சரியான நேரத்துக்கு வருவதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, கடந்த 1-ஆம் தேதி முதல் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்வதற்கு பயோமெட்ரிக் கருவிகள் மூலம் பதிவு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் மாநில அளவில் ஒவ்வொரு பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கவும் முடியும்.

இதற்கிடையே தொலை தூரப் பகுதிகளில் பள்ளிகளில் சரியான தொலைத் தொடர்பு வசதி கிடைக்காதது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகையைப் பதிவு செய்வதற்கு கணினி வசதி இல்லாதது போன்ற புகார்கள் இருந்தன. இவற்றைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் அதன் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம் மடிக்கணினிகள் வழங்குவதற்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வரவேண்டும், இதை பள்ளிகள் தோறும் நடைமுறைப்படுத்தும் நோக்கில், பயோமெட்ரிக் பதிவு அமலில் உள்ளது. ஆனால் போதிய கணினி வசதியில்லாததால், செயல்படுத்துவதில் சிரமம் இருந்து வந்தது.

இதைத் தீர்க்கும் வகையில் அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 1,662 உள்ளன.
இவற்றில் முதல் கட்டமாக அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கும் வகையில், 924 மடிக்கணினிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மடிக்கணினி மூலம் ஆசிரியர் வருகையையும், மாணவர்கள் வருகையையும் செயலிகள் மூலமும் பதிவு செய்ய வேண்டும்.

ஏற்கெனவே இது தொடர்பாக செயலி ஆப் பயன்படுத்துவது தொடர்பாகவும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.