. -->

Now Online

FLASH NEWS


Sunday 4 August 2019

பணிநிரந்தரம் எப்போது? 9 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!




5ஆண்டுகளில் மீதமுள்ள 16 மாதத்தில் நிறைவேற்றுமா  தமிழக அரசு !.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பணிநியமனம் செய்த பகுதிநேர ஆசிரியர்கள் :-
தமிழகத்தில் 14வது சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் 26.08.2011ல் அரசுப் பள்ளிகளில் 6,7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்துடன் கல்வி இணைச்செயல்பாடுகளும் நடத்திட ஏதுவாக உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி பாடப்பிரிவுகளை சேர்ந்த 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் இதற்கான அரசாணை பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் வெளியிடப்பட்டு  2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.
இது அதிமுக அரசின் ஓராண்டில் நூறாண்டு சாதனைகளில் ஒன்றாக சேர்த்து சாதனை மலராக வெளியிடப்பட்டது. முதல் முறையாக 2014ஆம் ஆண்டு ரூ.2ஆயிரம் சம்பள உயர்த்தி தரப்பட்டது. இந்த ரூ.2ஆயிரம் ஊதிய உயர்வானது ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவை தொகையுடன் வழங்கப்பட்டது. இது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இதன் பின்னர் 14வது சட்டசபை காலம் முடியும்வரை வேறெந்த சம்பள உயர்வையும் அறிவிக்கவில்லை.

அரசாணைப்படி கூடுதலான பள்ளிகளில் பணியமர்த்தவில்லை:-
அரசாணைப்படி காலிப்பணியிடங்களில் ஒருவரே நான்கு பள்ளிகளில் பணிபுரிந்து அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றுள்ளதை நடைமுறைப்படுத்தி இருந்தால் ஒவ்வொருவரும் ரூ.30ஆயிரம்வரை சம்பளம் பெற்று பொருளாதார சிக்கல் இன்றி வாழ்க்கையை நடத்தி இருப்போம். ஆனால் இதனை இன்றுவரை செயல்படுத்தாமல் குறைந்த சம்பளத்திலேயே அரசு எங்களின் வாழ்வாதாரத்தை உறிஞ்சிவிட்டது.

8 ஆண்டுகளில் ரூ.2ஆயிரத்து 700 மட்டுமே சம்பள உயர்வு :-
15வது சட்டசபைக்கு தேர்தல் நடந்து மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைத்தது. துரதிஷ்டவசமாக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானர். இதன் பின்னர்  முதல்வராக தேர்வான ஓ.பன்னீர்செல்வம் 3 மாதத்தில் ராஜிநாமா செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி தற்போது 30 மாதங்களாக ஆட்சி செய்து வருகிறார். இவரது காலத்தில் முன்புபோல 40 சதவீத சம்பள உயர்வோ, ஏப்ரல் முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையோ வழங்காமல் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 10 சதவீத சம்பள உயர்வாக ரூ.700 மட்டுமே தரப்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. இதனால் தற்போது ரூ.7ஆயிரத்து 700 தொகுப்பூதியம் தரப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட்ட ரூ.2ஆயிரத்து 700 சம்பள உயர்வு மிகவும் குறைவானது.

மே மாதம் சம்பளம் ரூ.53ஆயிரம் மற்றும் போனஸ் மறுப்பு :-
ரூ.7ஆயிரத்து எழுநூறு குறைந்த சம்பளத்தில் பணியாற்றும்போது 8 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம் ஒவ்வொருக்கும் ரூ.53ஆயிரத்துக்கும்மேல் மறுக்கப்பட்டு வருவதும், ஒருமுறைகூட போனஸ் தரமால் இருப்பதும், விடுப்பு சலுகைகள் வழங்காததால் சம்பள பிடித்தம் செய்வதும், இறந்து போன ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் சிறப்பு நிதியில் இருந்து குடும்பநலநிதி வழங்காமல் இருப்பதும், 58 வயதை எய்து பணிஓய்வு பெற்றவர்களுக்கு குடும்பநலநிதி எதுவும் வழங்காமல் இருப்பதும், நிரந்தரப் பணி நியமனங்களில் எங்களையே நியமிக்காமல் குறைந்தபட்சம் முன்னுரிமைகூட தராமல் இருப்பதும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. எனவே இதனை அரசு கவனமுடன் தீர்வுகாண முன்வரவேண்டும்.

7வது ஊதியக்குழு புதியசம்பளஉயர்வு  மறுப்பு :-
தொகுப்பூதியதாரர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வானது 10 சதவீதம் வழங்கப்படுவது சரிவர தரப்படவில்லை. வருடாந்திர  10 சதவீத சம்பள உயர்வு தரப்பட்டு இருந்தால் இந்நேரம் சம்பளம் ரு.10ஆயிரம் கிடைத்திருக்கும். இதனிடையே 7வது ஊதியக்குழு அரசாணைப்படி திட்டவேலையில் பகுதிநேர தொகுப்பூதிய வேலையில் உள்ளவர்களுக்கும் 30 சதவீதம் சம்பள உயர்வை வழங்கி இருந்தால் 15 ஆயிரம்வரை கிடைத்திருக்கும். எனவே பணிநிரந்தரம் செய்யும்வரை குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் சம்பளமாவது வழங்க அரசு முன்வரவேண்டும்.


4ஆயிரம் காலிப்பணியிட நிதியினை 12ஆயிரம் பேர் சம்பள உயர்விற்கு பகிர்க:-
மேலும் 16ஆயிரத்து 549 பணியிடங்களில் விபத்து மற்றும் இயற்கை மரணம், 58 வயதால் பணிஓய்வு, வேறு பணிக்கு சென்றதால் பணி ராஜிநாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள 4 ஆயிரம் காலிப்பணியிட ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை தற்போது பணிபுரிந்துவரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பகிர்ந்து வழங்கினால் அரசுக்கு நிதி இழப்பு வராமலே ரூ.15ஆயிரம்வரை சம்பளம் கொடுக்க முடியும். இதனை கடந்த ஜனவரி 2019 சட்டசபை கூட்டத்தொடரில் வேடச்சந்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் கேள்வி நேரத்தின்போது அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

2017ம்ஆண்டு கல்விஅமைச்சர் செங்கோட்டையன் பணிநிரந்தரம் செய்ய கமிட்டிஅறிவிப்பு :-  விரைந்து செயல்படுத்துக:-
மேலும் 2017 சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 15 ஆயிரம் சம்பளம் தரவேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புவனகிரி தொகுதி சரவணன், முன்னாள் அமைச்சர் திருக்கோவிலூர் தொகுதி பொன்முடி ஆகியோர்களின் கேள்விக்கு பணிநிரந்தரம் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றும், விரைவில் பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இதனை கல்வி அமைச்சர் சொன்னபடி 2017ம் ஆண்டிலேயே செய்திருந்தால் பொருளாதார சிக்கலின்றி வாழ்ந்திருப்போம். அமைச்சர் அறிவித்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது. எனவே இதனை விரைவுபடுத்த வேண்டும்.

ஜாக்டோஜியோ வேலைநிறுத்த நாட்களில் - அரசின் உத்தரவை ஏற்று மூடிய பள்ளிகளை திறந்து நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசின் கைமாறு என்ன?.
பகுதிநேர ஆசிரியர்களில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிதி, 58 வயதால் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு நிதி, போனஸ், வருடாந்திர சம்பள உயர்வு, 7வது ஊதியக்குகுழு 30 சதவீத சம்பள உயர்வு, இ.பி.எப், இ.எஸ்.ஐ, 4 பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, மகளிருக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மற்றும் விடுமுறை சலுகைகள், சம்பளத்தை ஒரே தேதியில் வழங்க பள்ளி ஆசிரியர்களுடன் இணைத்து ஒரே சம்பள பட்டியல் உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றினைகூட அரசு செய்யாவிட்டாலும் ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களின்போது கலந்து கொள்ளாமல் அரசுக்கு ஆதரவாக அரசின் உத்தரவின்படி பள்ளிகளை திறந்து நடத்திய இந்த பகுதிநேர ஆசிரியர்களே. இதற்காக தனியே சம்பளம் எதுவுமின்றி நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் செய்யும்வரை குறைந்தபட்சமாக ரூ.15ஆயிரம் சம்பளமாவது வழங்குவதே அரசு எங்களுக்கு செய்யும் கைமாறாகும்.
பணிநிரந்தரம் செய்ய மேலும் ரூ.200கோடி /
ரூ.15ஆயிரம் சம்பளம் தர மேலும் ரூ.100கோடி :-
தற்போது தரப்படும் தொகுப்பூதியமான ரூ.7ஆயிரத்து 700 தருவதற்கு அரசுக்கு சுமார் ரூ.115கோடி செலவாகிறது. இக்குறைந்த சம்பளத்தை உயர்த்தி கோவா, ஆந்திராவைபோல ரூ.15ஆயிரமாக தருவதற்கு இப்போது ஒதுக்கப்படும் நிதியிலுருந்து மேலும் ரூ.100கோடி ஒதுக்கினால் போதும்.
அதேவேளையில் எங்களை இடைநிலை ஆசிரியர் நிலையில் பணிநிரந்தரம் செய்ய இப்போது ஒதுக்கப்படும் நிதியிலுருந்து மேலும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கினாலே போதுமானது. இதனை அரசு 12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட உடனடியாக பரிசீலித்து வழங்க முன்வரவேண்டும்.

ரூ.ஆயிரத்து 627 கோடி நிதி திரும்ப ஒப்படைப்பு
கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் இடைநிலை கல்வி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றின்கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்த ரூ.1627 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அது உபயோகப்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை பணிநிரந்தரம் கோரிவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மற்ற இதே எஸ்.எஸ்.ஏ.வில் வேலைசெய்யும் இதர ஒப்பந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் பயன்படுத்தி இருக்கலாம்.

பட்ஜெட்டில் ஒருமுறைகூட அறிவிப்பு இல்லை - ஏமாற்றம் :-
மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ. திட்ட வேலையில் எங்களின் பணிநியமன அறிவிப்பை 110ன்கீழ் அறிவித்ததோடு சரி, இதுவரை நடந்திட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்களில் பகுதிநேர ஆசிரியர்கள் சம்பள உயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்து ஒருமுறைகூட அறிவிக்காமல் கைவிட்டு விட்டனர். இந்த முறையும் எங்களின் 9 ஆண்டுகால எங்களின் பணியை அங்கீகரித்து பணிநிரந்தரமோ அல்லது சம்பளத்தை ரூ.15ஆயிரமாக வழங்கவோ அறிவிக்காமல் பட்ஜெட் மானிய கூட்டத்தொடரை முடித்தது எங்களை சொல்லமுடியாத சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

ஆட்சி இருக்கும் 16 மாதங்களில் புதிய அரசாணையிட்டு பணிநிரந்தரம் செய்க.
எங்கள் நியமனத்திற்கு பின்னர் காவல்துறையில் ரூ.7ஆயிரத்து 500 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இளைஞர் சிறப்பு படை, கல்வித்துறையில் ரூ.5ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்ட்ட துப்புரவு மற்றும் இரவு காவலர்கள் பின்னர் காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர். எங்களை மட்டும் மத்திய அரசின் திட்ட வேலை என்று சொல்லியே பணிநிரந்தரம் செய்யாமல் உள்ளது மனிதநேயம் இல்லை.
பள்ளிப்பணியில் எல்லா வகையிலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்களை கல்வி அமைச்சரும், முதல்வரும் பெருமனதுடன் ஒரே அரசாணையில் பணிநிரந்தரம் செய்திட முடியும். இதனை அரசே விரைந்து முடிவு செய்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் என்றார்.
தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்பணியிடங்களாக மாற்றுக:-
ஜெயலலிதா  வழியில் ஆசியில் ஆட்சி நடத்துகிறோம் என சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னால் முதல்வர் ஜெயலலிதாவால் 8 எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதே அமரர் ஜெயலலிதாவுக்கு செய்யும் சிறப்பாகும். முதல்வர் எடப்பாடி பழனிசாம செய்வாரா என எதிர்பார்க்கிறோம். அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் பூர்த்தி செய்ய இன்னும் 16 மாதங்களே உள்ள நிலையில் இந்த எஸ்.எஸ்.ஏ. திட்ட வேலைக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்தி 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை அவரவர் பாடப்பிரிவுகளில் பணிநிரந்தரம் செய்வார்களா என எதிர்பார்ப்போம்
நலவாரியங்கள் மூலம் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிதி:- பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்குக:-
கட்டிடத்தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் தினக்கூலிகள் இறந்துவிட்டால் அவர்களுக்கான அரசு அமைத்துள்ள நலவாரியங்கள் மூலம் 1இலட்சம் 2இலட்சம், 3 இலட்சம் என கொடுக்கிறார்கள். எனவே எங்களில் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி கொடுக்க முன்வரவேண்டும். இத்திட்ட வேலையில் 16ஆயிரம்பேரை பணியமர்த்திய அரசு எங்களின் துயரை துடைக்காமல் வேடிக்கை பார்ப்பது எந்தவகையில் நியாயம் என அனைவரும் கவலையில் உள்ளதை அரசு போக்கவேண்டும்.
வேலையின்மையே நாட்டிற்கு பெரும் பிரச்சனை – தீர்வு காண்க:-
இன்றைய நிலையில் தமிழகத்தில் 80 இலட்சம் வேர் வேலைக்காக காத்திருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த நிலையில் 16ஆயிரம் பேரை எஸ்.எஸ்.ஏ. திட்ட வேலையில் தற்காலிகமாக  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்துவிட்டு பணிநிரந்தரப்படுத்தாமல் அரசு மௌனம் காப்பது பெருகிவரும் வேலையின்மையை ஒழிப்பதற்கு தீர்வாக அமையாது. இன்றுள்ள தமிழகத்தின் பிரதான பிரச்சனைகளால் பகுதிநேர ஆசிரியர்கள் படும் இன்னல்கள் அரசின் கவனத்தை ஈர்க்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். எனவே அரசு சிறப்பு கவனம் செலுத்தி எங்களுக்கு அதிகபட்ச சம்பளத்தையோ அல்லது பணிநிரந்தரத்தையே உடனடியாக செய்திட முன்வரவேண்டும்.
இவண்,
  சி.செந்தில்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர்