. -->

Now Online

FLASH NEWS


Sunday 15 September 2019

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடர்பான கருத்துக்கள்



சில தனியார் பள்ளிகள், நன்கு படிக்கும் மாணவர்களுக்கு அதிக பயிற்சிகள் அளித்தும், சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு, நான்காம் வகுப்பு பாடங்களை நடத்தாமல்,  ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வைக் கருதி, நான்காம் வகுப்பிலேயே, ஐந்தாம் வகுப்பு பாடங்களை நடத்தி, எங்கள் பள்ளியின், தேர்ச்சி சதவீதம் 100% எனவும், 90 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர் இவ்வளவு பேர் எனவும், விளம்பரங்களை அளித்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஈர்க்க முயல்வர்.

அதிக பயிற்சிகள் அளிக்கும் போது, குழந்தைகள் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.

10, 11, 12 ஆம் வகுப்புகளில் நடத்தப் படுவதைப் போல, தினமும் Slip test, Unit Test என பல்வகைத் தேர்வுகளை தினமும் எழுத வேண்டிய நிலைக்கு, குழந்தைகள் உட்படுத்தப் படுவர்.

தேர்வில் தேர்வாக முடியாத மாணவர்களை நான்காம் வகுப்பிலேயே அடையாளம் கண்டு, கட்டாயப் படுத்தி பள்ளியை விட்டு வெளியேற்றவும் வாய்ப்புண்டு. இதனால் குழந்தைகள் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புண்டு.


எழுத்துக்களே தெரியாமல் வரும், இவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்து, ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வைக்க, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக போராட வேண்டிய நிலை உருவாகும்.

சில தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகம் காட்டும் நோக்கில், முறை கேட்டில் ஈடுபடவும் வாய்ப்புண்டு.

பெரிய பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு பாடம் நடத்துவதற்கு, சில ஆசிரியர்கள் தயக்கம் காட்டும் நிலையும் ஏற்படும்.

பாடப்புத்தக பயிற்சிகள் மட்டும் பொதுத் தேர்வில் வந்தால், ஓரளவு அனைவரையும் (IED குழந்தைகள் தவிர) தேர்ச்சி பெற வைக்கலாம்.

ஆனால் NAS, SLAS அடிப்படையிலும், Twist வகையிலும் வினாக்கள் அமையுமானால் தேர்ச்சி பெற வைப்பது கடினம்.

தற்போதைய புதிய பாடப்புத்தகத்தில், பாடங்களும், பாடக் கருத்துக்களும் அதிகளவு இடம் பெற்றிருப்பதால், பொதுத் தேர்வு வினாத்தாள் மாணவர்கள் அடுத்த நிலைக்கு செல்ல ஊக்குவிக்கும் வகையில் எளிமையாக வடிவமைக்க வேண்டும்.

வடிகட்டும் வகையில் கடினமாக வினாத்தாள்களை வடிவமைத்தால், கல்வி மீதும், பள்ளி மீதும் வெறுப்பு ஏற்பட்டு, இடை நிற்றலுக்கு காரணமாக அமையக் கூடும்.

ஐந்தாம் வகுப்பைப் பொறுத்தவரை, வாசித்தல் திறன் (50%) அடிப்படையிலும், எளிமையான புறவய (50%) வினாக்களின் அடிப்படையிலும் தேர்ச்சி அளிப்பதே சிறப்பாக இருக்கும்.

- லாரன்ஸ், திருச்சி