. -->

Now Online

FLASH NEWS


Friday 22 November 2019

முதுகலை ஆசிரியர் பணியிடம் - தேர்வெழுதிய ஒன்றரை லட்சம் பேரில் 10 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி

முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வெழுதிய ஒன்றரை லட்சம் பேரில் 10,693 பேர் மட்டுமே தேர்ச்சிக்குரிய மதிப்பெண் பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 157 பணியிடங்களுக்கு தகுதியான ஆட்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள 2,144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கணினி வழியில், கடந்த செப்டம்பரில் ஆசிரியர் தேர்வு வாிரயம் போட்டித்தேர்வை நடத்தியது. 1,47,594 முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதிய நிலையில், இதன் முடிவை, கடந்த அக்டோபர் 21- ம் தேதி வெளியானது. அதன்பின் 1 பணியிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.அதன்படி, ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்ற எழுத்து தேர்வில், 10,693 பேர் மட்டுமே தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். முதற்கட்டமாக 14 பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டதில் 1509 காலியிடங்களுக்கு 1352 தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதில், உயிர்வேதியியல், கணினியியல், இயற்பியல், வணிகவியல் உள்ளிட்ட பல பாடங்களில் உள்ள 157 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆட்கள் இல்லை என்பது தேர்வு முடிவுகள் விபரங்கள் கூறுகின்றன.

மேலும் உயிர்வேதியியல்,இந்திய கலாச்சாரம் ,உள்ளிட்ட பாடங்களில் தேர்வெழுதியவர்கள் 90 சதவிகிதத்திற்கு மேல் தேர்சிபெறவில்லை. உதாரணமாக உயிர்வேதியியல் பாடத்தில் 168 பேர் தேர்வெழுதியபோதும், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

மேலும் தமிழ் , வரலாறு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு தேர்வெழுதிய 634 தேர்வர்களுக்கான தகுதியானவர்களின் தேர்வு பட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

உயர்கல்வியில் தமிழகம் நாட்டில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாக அரசு கூறி வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள வேலை வாய்ப்புகளை கூட பெறக்கூடிய தகுதியை பட்டதாரிகள் பெறாதது, தமிழகத்தின் உயர்கல்வியின் தரம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.