அரசு அலுவலகத்தில் பணிபுரியும் நிரந்தரம் ஆகாத பெண்களுக்கும் 270 நாள் பிரசவகால விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ காலத்தில் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது.
தமிழக அரசு 1993-ம் ஆண்டு பெண் அரசு ஊழியர்களுக்கு பிரசவ கால விடுமுறை 90 நாட்களாக இருந்தது. பின்னர் 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் இருந்து இந்த விடுமுறை 270 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. முதல் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களாக பணியில் சேர்பவர்களுக்கு முதல் 2 வருடங்கள் பயிற்சி காலமாக கருதப்படும். அதன் பிறகே அவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். நிரந்தரமாக அரசு பெண் ஊழியர்களுக்கே இந்த பிரசவ கால விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, அரசு பணியில் சேர்ந்து நிரந்தரம் ஆகாத பெண்களுக்கும் பிரசவகால விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருமணமான பெண் ஊழியருக்கு அரசு வேலை செய்தால் நிரந்தரம் ஆகாவிட்டாலும் அவர்கள் பிரசவ கால சலுகையை பெறலாம்.
இனி அவர்களுக்கும் பிரசவத்துக்காக 270 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. பெண் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.