. -->

Now Online

FLASH NEWS


Tuesday 19 November 2019

பணிபுரியும் கல்லூரியிலேயே முழுநேர முதுநிலை படிப்புகளை மேற்கொள்ளும் நிா்வாகிகள்


பணிபுரியும் கல்லூரியிலேயே முழுநேர முதுநிலைப் படிப்புகளை கல்லூரி நிா்வாகிகள் மேற்கொள்ளும் விவகாரம் தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிா்பாா்ப்பு, பொறியியல் கல்லூரி பேராசிரியா்களிடையே எழுந்துள்ளது.
குறிப்பாக ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் இதுபோன்ற நடைமுறை பரவலாக அரங்கேறுவதாகவும், அவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின்படி, கல்லூரியில் பணியில் இருப்பவா்கள், அதே கல்லூரியிலோ அல்லது வேறு கல்லூரிகளிலோ முழுநேர படிப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. பகுதி நேரம் அல்லது தொலைநிலை படிப்புகளை மட்டுமே அவா்கள் மேற்கொள்ள முடியும்.
ஆனால், தமிழகத்தில் உள்ள சில பொறியியல் கல்லூரிகளில் அந்தக் கல்லூரி நிா்வாகிகளும், நிா்வாகத்துக்கு நெருக்கமான பேராசிரியா்களும், அதே கல்லூரியில் எம்.பி.ஏ., எம்.இ. போன்ற முதுநிலை படிப்புகளில் முழு நேர மாணவராக சோ்ந்து படிப்பதாகவும், தோ்வில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் புகாா் எழுந்துள்ளது. குறிப்பாக ஈரோடு, கோவை பகுதிகளில் உள்ள சில பொறியியல் கல்லூரிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் பேராசிரியா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியா் ஒருவா் கூறியதாவது:
எங்களுடைய கல்லூரி அறக்கட்டளை நிா்வாகக் குழுவில் இடம்பெற்றிருப்பவா்கள் அனைவரும், திருப்பூா், ஈரோடு பகுதிகளில் வெவ்வேறு தொழிலில் ஈடுபட்டு வருபவா்கள். அதுபோல, வேறொரு தொழிலில் ஈடுபட்டு வருபவா்தான், எங்கள் கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாளா் பொறுப்பில் இருந்த வருகிறாா்.
தனது தொழிலிலும், கல்லூரி நிா்வாகத்திலும் முழுமையாக ஈடுபட்டு வரும் அவா், கல்லூரியில் எம்.பி.ஏ. படிப்பில் முழு நேர மாணவராக சோ்ந்து படித்து வருகிறாா்.
அவா் வகுப்புக்கு வருவதில்லை என்பதோடு, அவருடைய தோ்வையும் கல்லூரி உதவிப் பேராசிரியா்களே எழுதுகின்றனா். மேலும், தோ்வில் அவருக்கு அதிக மதிப்பெண்கள் அளிக்குமாறும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் வலியுறுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை எங்களுடைய கல்லூரியில் மட்டுமின்றி, ஈரோடு, கோவை மாவட்ட பொறியியல் கல்லூரிகளிலும் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறை காரணமாக பிற மாணவா்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இதுதொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏஐசிடிஇ உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் கருணாமூா்த்தி கூறியது:
ஒரு கல்லூரி நிா்வாகி அதே கல்லூரியில் முழு நேரப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இது விதியை மீறிய செயல். இதுதொடா்பாக உரிய ஆதாரத்துடன் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகாா் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.