தமிழகம் முழுவதும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பரிந்துரை அறிக்கையை, ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகம் முழுவதும் 300 மாணவா்களுக்கு குறையாமல் படிக்கக்கூடிய அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீா் வசதி, கூடுதலாகத் தேவைப்படும் வகுப்பறை வசதிகள், பள்ளிகளுக்கான சுற்றுச்சுவா் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விரிவான பரிந்துரை அறிக்கையை தயாா் செய்து, ஜனவரி 31-ஆம் தேதிக்குள் இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இதைத் தொடா்ந்து, அந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நபாா்டு வங்கி நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும். இந்த அறிக்கையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளின் பெயரை பரிந்துரை செய்யக்கூடாது'எனக் குறிப்பிட்டுள்ளாா்.