. -->

Now Online

FLASH NEWS


Thursday 5 December 2019

உள்ளாட்சி தேர்தல் வழக்கு தீர்ப்பு : 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


   

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் 8 வாக்காளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.

தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடும்போது,

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறுவரையறை செய்ய தேவையில்லை. 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போதுதான் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை செய்ய முடியும்  என கூறப்பட்டது.

திமுக தரப்பில் மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படவில்லை என வாதிடப்பட்டது.

"தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும். நாடாளுமன்றம் என்ன விதி வகுத்துள்ளதோ அதன்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது. இத்தனை ஆண்டுகள் ஏன் தேர்தல் நடத்தாமல் இருந்தீர்கள்? மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு சார்பில் வாதிடும்போது,

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. 2021 புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகே மீண்டும் மறுவரையறை செய்யப்படும். தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபின், எந்த நீதிமன்றத்தாலும் தள்ளிப்போட முடியாது என வாதிடப்பட்டது.

புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகளை சரியாக செய்யவில்லை என்றால் குழப்பம் ஏற்படாதா? எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது? பழைய தொகுதி மறுவரையறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது. புதியதாக  உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தொகுதி மறுவரையறை உத்தரவை திரும்பப் பெற முடியுமா? 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா?என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

திமுக தரப்பில், 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்தால் குழப்பம் ஏற்படும். தள்ளிவைத்தால் மொத்தமாக  தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளிவைக்கலாமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என மதியம் 2 மணிக்கு பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று பிற்பகல் 2  மணிக்குள் பதில் தர தமிழக அரசுக்கு  சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து 2.00 மணிக்கு தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க தயார் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.


இதைத் தொடர்ந்து 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உள்ளது.