. -->

Now Online

FLASH NEWS


Sunday 19 January 2020

முதன்முதலில் ‘அ’ கற்பித்த குரு! - 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்களை நெகிழவைத்த மாணவர்கள்

30 ஆண்டுகளுக்கு முன்பு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்த நிகழ்வு திண்டுக்கல்லில் நடைபெற்றது.
'அ' கற்றுத்தந்த ஆசிரியர்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களைக் கௌரவப்படுத்த நினைத்தனர். அதற்காக ஆசிரியர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது பட்டிவீரன்பட்டி. இங்குள்ள ந.சு.வி.வி தொடக்கப்பள்ளியில் 1987-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில், தங்களுக்கு முதன் முதலில் 'அ' கற்றுத்தந்த ஆசிரியர்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களைக் கௌரவப்படுத்த நினைத்தனர். 

அதற்காக ஆசிரியர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தங்கள் ஆசிரியர்களைக் கண்டறிந்தனர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக இல்லாமல், முன்னாள் ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திப்பு நிகழ்வாக நடத்த வேண்டும் என்ற தங்களது ஆவலைத் தெரிவித்தனர். முன்னாள் மாணவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, அப்போது பணிபுரிந்த முன்னாள் ஆசிரியர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். அதன்படி, நேற்று அந்தச் சந்திப்பு நடைபெற்றது.


சென்னை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அந்நாள் ஆசிரியர்கள் 15 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் பலரும் மலரும் நினைவுகளில் மூழ்கினர். படித்த வகுப்பறை, மதிய உணவு சாப்பிட்ட மரத்தடி, விளையாடிய மைதானம் என அந்த நாள் நினைவு அனைவரின் முகத்திலும் அலையடித்தது.
அப்போதைய தலைமை ஆசிரியர் திலகவதிக்கு தற்போது 85 வயது. 


இந்த வயதிலும் மாணவர்களின் அன்புக்காக மேடையேறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆசிரியர்கள் அனைவரையும் விழா மேடையில் அமரவைத்து அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து பரிசுப்பொருட்கள் வழங்கிக் கௌரவப் படுத்தினர். முன்னாள் மாணவர்களும், முன்னாள் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு 2 மின் விசிறிகள் வழங்கப்பட்டன.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, மாணவர்கள் தங்களை நினைவில் வைத்து அழைத்துக் கௌரவப்படுத்தியது ஆசிரியர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.30 ஆண்டுகளுக்குப் பிறகு, மாணவர்கள் தங்களை நினைவில் வைத்து அழைத்துக் கௌரவப்படுத்தியது ஆசிரியர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகப் பெருமைப்பட்டார்கள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களான விஜயசுந்தர், நல்லதம்பி, ராஜேந்திரன், பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

நன்றி: ஆனந்த விகடன்