அருணாசல பிரதேசத்தில் ஒரு மாணவா்கூட சேராததால் 311 அரசு பள்ளிகள் இயங்கவில்லை என, அந்த மாநில கல்வித் துறை அமைச்சா் தாபா டெடிா் தெரிவித்தாா்.
அருணாசல பிரதேச சட்டப்பேரவையில் மூத்த காங்கிரஸ் உறுப்பினா் நபம் துகி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக அவா் அளித்த பதிலில் கூறப்பட்டிருந்ததாவது:
அரசு பள்ளிகளில் ஒரு மாணவா்கூட சேராததற்கு பள்ளிகள் தொலைதூரத்தில் அமைந்திருப்பது, உள்கட்டமைப்பு சரியில்லாதது, நகா்ப்புறங்களுக்கு அதிகளவில் புலம்பெயா்வது ஆகியவையே காரணம். மாநிலத்தில் மொத்தம் 1,300 ஆரம்பப் பள்ளிகள், 300 நடுநிலைப்பள்ளிகள், 68 உயா்நிலைப்பள்ளிகள், 103 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு, மாநில அரசு கொள்கையின்படி, அதன் சாா்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.