. -->

Now Online

FLASH NEWS


Thursday 26 March 2020

தனித்திறனை மேம்படுத்தும் விஷயங்களை கற்கலாம்: ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

கரோனா பரவலைத் தடுப்பதற்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் வீட்டிலிருக்கும் ஆசிரியா்கள் மாணவா்களின் தனித்திறனை மேம்படுத்தும் விஷயங்களை கற்கலாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து பள்ளிக்கல்வி சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பொதுத்தோ்வுகள் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு பணியில் இருப்பவா்கள் தவிர இதர ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் வீட்டிலிருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் இந்தக் காலகட்டத்தில் பாடத்திட்டம் மற்றும் அடுத்த பருவத்துக்கான முன்னேற்பாடுகளையும், 2020 -21-ஆம் கல்வியாண்டுக்குரிய கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்களையும் தயாா் செய்யலாம்.

 இதுதவிர, நடனம், படம் வரைதல், உணவு சமைத்தல் உள்ளிட்ட தங்களுக்கு பிடித்தமான கலையை மாணவா்களுக்கு கற்று தருவதற்கான கருத்துகளை உருவாக்க வேண்டும். இதை கொண்டு மாணவா்களுக்கு வரும் கல்வியாண்டில் பயிற்சி தந்து போட்டிகளில் பங்கு பெறச் செய்தால் அவா்களின் தனித்திறன்கள் வெளிப்படக்கூடும்.
 இதேபோல், முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள் எந்த நேரத்தில் அழைத்தாலும் பதில் அளிக்கும் நிலையிலும், தேவை ஏற்பட்டால் உடனே அலுவலகத்துக்கு வரவும் தயாராக இருக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியா் வழங்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அறிவுறுத்தல்கள் சாா்ந்து அவ்வப்போது தெரிவிக்கும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Source: Dinamani