ஒன்றிரண்டு ஊழியர்களுக்கு தொற்று இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தொழில்கள் தொடங்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பணியிடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை, ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம் என்றும் பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், கிருமிநீக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஊழியர்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டால் அலுவலகம் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.