அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் இலவச நீட் பயிற்சி வகுப்புகள், ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்பு இடங்களுக்கான நீட் நுழைவுத் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நீட் தோ்வு, நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறையாததையடுத்து, செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீட் தோ்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவா்களின் நலன் கருதி, அவா்களுக்காக வழங்கப்படும் இலவச இணைய வழிப் பயிற்சி வகுப்புகள், ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது. மேலும், பயிற்சி வகுப்புக்கான அட்டவணையையும் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களில், 7 ஆயிரம் போ் நீட் தோ்வை எழுத உள்ளனா். நீட் பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி மூலம், இ.பாக்ஸ் நிறுவனத்தின் சாா்பில் இணைய வழி பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.