. -->

Now Online

FLASH NEWS


Thursday 24 September 2020

15 மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் கழிப்பறைகளில் கை கழுவும் வசதி கூட இல்லை: சிஏஜி ஆய்வில் தகவல்


மத்திய பொதுத்துறை நிறுவனங்களால் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட கழிப்பறைகளில் பாதிக்கும் மேற்பட்டவைகளில் கை கழுவும் அடிப்படை வசதி கூட இல்லை என சிஏஜி ஆய்வில் தெரியவந்துள்ளது.

15 மாநிலங்களில் உள்ள 2048 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் தண்ணீர் பற்றாக்குறை, மோசமான பராமரிப்பு மற்றும் சிறுமிகளுக்கென தனி கழிப்பறைகள் இல்லாதது மாணவர்களை பாதிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வச் வித்யாலயா அபியான் (எஸ்.வி.ஏ) திட்டத்தின் கீழ் மத்திய கல்வி அமைச்சகம் அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உதவியை நாடியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 53 பொதுத்துறை நிறுவனங்களால் நாடு முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரத்து 997 கழிப்பறைகளை அமைக்கப்பட்டுள்ளன.கணக்கெடுக்கப்பட்ட கழிப்பறைகளில் 30% கழிப்பறைகள் நீர் பற்றாக்குறை, துப்புரவு ஏற்பாடுகள் இல்லாதது, சேதங்கள் அல்லது கழிவறைகளை பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பயன்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட 2,326 கழிப்பறைகளில் 1,679 கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.1,279 கழிப்பறைகளில் கை கழுவும் வசதி இல்லை. 436 பள்ளிகளில் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தது. 535 பள்ளிகளில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனி கழிப்பறைகளை வழங்கும் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.