விழுமிய அடிப்படையிலான முழுமையான கல்விக்கு, கல்வி முறையை மறுமதிப்பீடு செய்யுங்கள் என பல்கலைக் கழகங்களிடமும், கல்வியாளர்களிடமும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிக்கிம் ஐசிஎப்ஏஐ பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா காணொலிக் காட்சி மூலம் நடந்தது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது :
”முழுமையான வேதக் கல்வியிலிருந்து கல்வியாளர்கள், உத்வேகம் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் பின்னால் உள்ள தொலைநோக்கைப் புரிந்து கொள்ள வேண்டும். விழுமியங்களற்ற கல்வி, கல்வியே அல்ல என குருதேவ் ரவீந்தரநாத் தாகூர் கூறுவார். திறமையானவர்களையும், இரக்க குணம் உள்ளவர்களையும் கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் உருவாக்க வேண்டும். வெறும் பட்டதாரிகளை மட்டும் உருவாக்கக் கூடாது.
பருவநிலை மாற்றம் என்ற சவாலை எதிர்த்துப் போராட, முழுமையான தீர்வு, விழுமிய-அடிப்படையிலான கல்வி. இது இயற்கையை மதிக்கிறது. தீவிர பருவநிலை சவால்களுக்கு, புதுமையான தீர்வு காண, நமது பொறியாளர்களையும், தொழில்நுட்ப நிபுணர்களையும் தயார் செய்ய வேண்டும்.
நமது பழங்கால கல்வி முறையில் விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேதங்களும் உபநிடதங்களும், தனக்கும், குடும்பத்துக்கும் மற்றும் இயற்கைக்கும் உள்ள நமது கடமைகளைக் கட்டாயமாக்குகின்றன. இயற்கையுடன் இணக்கமாக வாழ நமக்கு கற்பிக்கப்பட்டது.
இயற்கையிடமிருந்து மாணவர்கள் கற்றுக் கொண்டு, நமது பழங்கால கலாச்சாரங்களில் கூறப்பட்டுள்ள மதிப்புகளை பின்பற்ற வேண்டும்.
பழங்கால குருகுல முறையில், கல்வி முழுமையானதாக இருந்தது. அதுதான் விஸ்வ குரு என்ற பட்டத்தை, நமக்கு அப்போது அளித்தது. புதிய கல்விக் கொள்கையும், இந்த இலட்சியங்களை வகுத்து, இந்தியாவை மீண்டும் விஸ்வ குருவாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய கல்வி கொள்கைதான் இப்போது நமக்கு தேவையான சீர்திருத்தம். தொழில்நுட்பத்துடன் கூடிய மதிப்பு மிக்க கல்விதான் இப்போதைய தேவை. சமீபத்திய தொழில்நுட்பங்களை அறிந்தவர்கள் மட்டும் அல்ல, இரக்கம், புரிதலுடன் கூடியவர்கள்தான் நமக்கு தேவை.
விழுமியங்கள் நிறைந்த முழுமையான கல்விக்கு, கல்வி முறையை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியாளர்கள் மறு மதிப்பீடு செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள், கோவிட்-19 போன்ற சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு மாணவர்களை உருவாக்க வேண்டும்.
வேலைகளை உருவாக்க விரும்புவர்களுக்கு, இந்தியாவை விட சிறந்த இடம் எதுவும் இருக்க முடியாது. இதற்காக நாம் பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கில் கவனம் செலுத்துகிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.