பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை வரும் 20 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, கொரோனா பரவல் தடுப்பு மையம் பல பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ளது. இதில் 4,300 படுக்கைகள் காலியாக உள்ளன. மக்கள் இதைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கி வைக்கிறார். தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
கூடுதல் தடுப்பூசிகள் வர இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் படுக்கைகள் ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் காலியாக உள்ளது. முதலமைச்சர் பல மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் வர வைத்து உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்து வருகிறார்.
ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. போலி மருந்துகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.