பழங்காலத்தில் நமது முன்னோர்கள் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட்டால் நன்மைகள் கிடைக்கும், எது தீமைகள் விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து தெரிவித்திருக்கிறார்கள்.
இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் அவை நமது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அதனால், அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. அதுபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவற்றையும் நாம் சாப்பிடக்கூடாது. அதையடுத்து, எந்தெந்த உணவு பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
சேர்த்து சாப்பிடக்கூடாதவை
தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது.
திப்பிலியுடன், சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.
தேன் சாப்பிட்ட பிறகு இனிப்பு உணவு சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.
வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பான பழங்களுடன் அல்லது அவற்றை சாப்பிட்டவுடன் பால் குடித்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.
முருங்கை, முள்ளங்கி உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது.
பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
வாழைப் பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக் கூடாது.
பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். உணவுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது.
நெய்யை, வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக் கூடாது.
நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி சாறு அருந்தியிருந்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் குடிக்க கூடாது.
கோதுமையை, நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக் கூடாது.
அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள கூடாது.
பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள கூடாது.
தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, கடல் உணவுகள், அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
ஆஸ்துமா, சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், அசைவ உணவு ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.