மதுரையில் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பை புறக்கணித்த, ரத்து செய்ய கோரும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம் பயிற்சியில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு பரிந்துரைத்தது.இம்மாவட்டத்தில் டிச., 27, 30 இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் 16,500 ஆசிரியர்கள், அலுவலர்களை ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி டிச., 15 அந்தந்த ஒன்றியங்களில் நடந்தது. இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. பலர் பல்வேறு காரணங்களை கூறி தேர்தல் பணியை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவை முற்றுகையிட்டபடி உள்ளனர். இதனால் ஓட்டுச்சாவடிகளில் அலுவலர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறது.முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்காத 3 ஆயிரம் பேருக்கு பதிலாக காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களை பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அவர்களுக்கு டிச., 21ல் நடக்கும் 2வது கட்ட முகாமில் தேவையான பயிற்சியளிக்கப்படவுள்ளது.மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்தல் பணி உத்தரவு பெற்ற ஒரு பகுதியினர் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை. மற்றொரு பகுதியினர் தேர்தல் பணியை ரத்து செய்ய கோரி வருகின்றனர். இது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
.