விடுதி மாணவர்கள் புகார்படி, தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியையாக பணிபுரிந்து வந்தவர் மகாதேவம்மா, 49. இவர், அப்பகுதியில் உள்ள அரசு விடுதி ஒன்றின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இதில், 100 மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர். இங்கு, கடந்த வாரம் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, உணவு சரியாக வழங்குவதில்லை என மாணவ, மாணவியர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விடுதிக்கு சென்ற மகாதேவம்மா, புகார் செய்த மாணவ, மாணவியரை கண்டித்துள்ளார். மேலும், விடுதி சமையலர்கள் மூன்று பேருக்கும், விடுமுறை கொடுத்துள்ளார். இதனால், மாணவ, மாணவியர் மூன்று நாட்கள் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டனர். புகார்படி, சி.இ.ஓ., முருகன் விசாரணை நடத்தி, தலைமையாசிரியை மகாதேவம்மாவை சஸ்பெண்ட் செய்தார். * தளி அருகே உள்ள, மதகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், கனிகா ஜெசிகிறிஸ்டி, 40, ஆசிரியையாக பணிபுரிந்தார். அவர் பள்ளிக்கு சரியாக வராமலும், வகுப்புகளை ஒழுங்காக நடத்தாமலும் இருந்துள்ளார். புகார்படி, சி.இ.ஓ., விசாரணை நடத்தி, அவரை சஸ்பெண்ட் செய்தார். * தளி வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன், 54; இவர், அதிக சொத்துக்களை குவித்ததாக வந்த புகார்படி, சி.இ.ஓ., விசாரணை நடத்தி, ஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணியிறக்கம் செய்துள்ளார்.