பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியைகள் மீது போக்சோ வழக்கை கண்டித்து பெற்றோர் சாலை மறியல்

கோவையில் சோதனை என்ற பெயரில் மாணவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்திய பள்ளி முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் ஒன் படித்துவரும் மாணவரும், 9ம் வகுப்பு படித்துவரும் அவரது தம்பியும் பள்ளிக்கு செல்போன் கொண்டுவந்ததாக கூறி, சோதனை சென்ற பெயரில் பள்ளியின் முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் மாணவர்களின் ஆடைகளை களைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதில் இருவரும் காயமடைந்ததாகவும் மாணவர்களின் தந்தை சூலூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின்பேரில், போலீசார் பள்ளியின் முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது கொலை மிரட்டல், போக்சோ சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியைகள் மீது போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ- மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வந்த அவர்களது பெற்றோர்களும் திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை- திருச்சி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கருமத்தம்பட்டி டிஎஸ்பி பாலமுருகன், சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பெற்றோர் தரப்பில், ‘‘சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் பள்ளிக்கு செல்போன் கொண்டுவந்து மாணவ- மாணவிகளை தவறான முறையில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஓராண்டுக்கு முன்பே நாங்கள் சூலூர் போலீசில் புகார் செய்தோம். ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே பள்ளி முதல்வர், 3 ஆசிரியைகள் மீது போடப்பட்ட வழக்கை கைவிட வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்’’ என தெரிவித்து, கலைந்துசெல்ல மறுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.