. -->

Now Online

FLASH NEWS


Saturday 6 April 2019

2, 3ம் கட்ட தேர்தல் பயிற்சியில் பங்கேற்க தவறினால், அவர்களிடம் விளக்கம் கேட்டு, 17(பி) சார்ஜ் தேர்தல் அலுவலர்கள் மூலம் எச்சரிக்கை










சேலம் மாவட்டத்தில், 3,288 ஓட்டுச்சாவடிகளில், ஏப்., 18ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. அப்பணியில், ஓட்டுச்சாவடி அலுவலர் தலைமையில், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், 1, 2, 3 என்ற நிலையில், 15 ஆயிரத்து, 836 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு, தேர்தல் பயிற்சி வகுப்பு, முதல்கட்டமாக, கடந்த, 24ல் நடந்தது. மண்டல தேர்தல் அலுவலர்கள், 11 சட்டசபை தொகுதிகள் வாரியாக, தனித்தனியே பயிற்சி அளித்தனர்.அதில், பயிற்சிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை விபரம் (அடைப்புக்குறிக்குள் வராதவர்கள்): சேலம் வடக்கு தொகுதி, 909(91), தெற்கு, 899(128), மேற்கு, 1,309(177), கெங்கவல்லி, 1,318(67), ஏற்காடு, 1,415(204), ஆத்தூர், 1,329(90), சங்ககிரி, 1,234(131), மேட்டூர், 1,756(126), இடைப்பாடி, 1,285(118), ஓமலூர், 1,614(152), வீரபாண்டி, 1,367(117).

மொத்தம், 14 ஆயிரத்து, 435 பேர் வந்தனர். இது, 91.15 சதவீதம். வராதவர்கள், 1,401 பேர்.இதுகுறித்து, தேர்தல் பிரிவு மூத்த அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்ட பயிற்சி வகுப்பு, அனைவருக்கும் பொதுவானது. அதனால், பயிற்சிக்கு வராத அலுவலர்களிடம், உரிய காரணம் கேட்டறியவில்லை.



வரும், 7ல் நடக்கும், இரண்டாம் கட்ட பயிற்சி, அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட அலுவலர்களுக்கான பயிற்சி என்பதால், அனைவரும், கட்டாயம் பங்கேற்க வேண்டும். அதேபோல், முக்கியமானது மூன்றாம் கட்ட பயிற்சி. அது முடிந்த பின், பணிபுரியும் ஓட்டுச்சாவடி, கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். அதனால், 2, 3ம் கட்ட பயிற்சியில் பங்கேற்க தவறினால், அவர்களிடம் விளக்கம் கேட்டு, 17(பி) சார்ஜ் வழங்கப்படும்.

இதுதொடர்பாக, அந்தந்த, உதவி தேர்தல் அலுவலர் மூலம் அறிவுறுத்தப்பட்டு, பயிற்சியில் பங்கேற்க, அலுவலர்களுக்கு, தனித்தனியே அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அரசியல் தலையீட்டால்...: பயிற்சிக்கு வர விரும்பாத அலுவலர்கள் பலர், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் பரிந்துரை கடிதத்துடன் படையெடுப்பது குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிகளவில் பரிந்துரைத்துள்ளனர். எனினும், தேர்தல் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆணை வழங்குவதில் குளறுபடி; ஆசிரியர்கள் அலைக்கழிப்பு: சேலம் மாவட்டத்தின், 11 சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணிக்கு, 15 ஆயிரத்து, 836 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி, ஏப்., 7ல் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு, தொகுதி வாரியாக, மையம் ஒதுக்கப்பட்டு, ஆணைகள் வழங்கப்பட்டன. நேற்று காலை, விநாயகா மிஷன் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஜெய்ராம் கல்லூரி மையங்களில், பயிற்சி பெற ஆணை பெற்றவர்கள், அதை, உடனடியாக தேர்தல் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதனால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: வீரபாண்டி தொகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, சேலம், ஜெய்ராம் கல்லூரியிலும்; சேலம் தெற்கு தொகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, விநாயகா மிஷன் கல்லூரியிலும், பயிற்சி மையம் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, தேர்தல் அலுவலகத்தில் விசாரித்த பின்தான், மையம் மாறி வழங்கியது தெரியவந்தது. பின், அனைவரின் ஆணைகளும் திரும்ப பெறப்பட்டு, மீண்டும், புதிய ஆணை வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் பயிற்சி நடத்துவதிலேயே, குளறுபடி, அலைக்கழிப்பு நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்