. -->

Now Online

FLASH NEWS


Monday 22 April 2019

வாய்ப்பு! இன்ஜினியரிங் 'கட் ஆப்' மதிப்பெண் குறைய...பிளஸ் 2 தேர்வில் சென்டம் சரிவு எதிரொலி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் முக்கிய பாடங்களில் சென்டம் குறைந்துள்ளதால், இந்தாண்டு 4 சதவீதம் வரை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் சரியும்.பிளஸ் 2 பொதுத் தேர்வு இந்தாண்டு 1200 மதிப்பெண்ணிற்கு பதிலாக 600 மதிப்பெண்ணிற்கு நடத்தப்பட்டது. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக நுணுக்கமாக கேள்விகள் கேட்கப்பட்டது.இதன் காரணமாக நன்றாக படிக்கக் கூடிய புதுச்சேரி மாணவர்கள் சற்று திணறியே மதிப்பெண் எடுத்துள்ளனர்.நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை சதவீதம் இந்தாண்டு கடுமையாக குறைந்துள்ளது.நன்கு படிக்க கூடிய மாணவர்கள் கூட நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்ணை கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் அதிக எண்ணிக்கையில் எடுக்கவில்லை.பெரும்பாலான மாணவர்கள் 375 முதல் 425 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

550 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.கடந்தாண்டு புதுச்சேரியில் 327 மாணவர்கள் ஏழு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் (சென்டம்) எடுத்திருந்தனர். ஆனால் இந்தாண்டு வெறும் 74 மாணவர்கள் தான் சென்டம் அடித்துள்ளனர். அதிலும் கணக்கு பதிவியலில் -34 மாணவர்கள், வணிகவியல்-8, பொருளியல் பாடங்களில் 4 பேர் என 46 மாணவர்கள் சென்டம் அடித்துள்ளனர்.இவர்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்தாண்டு முக்கிய பாட பிரிவுகளில் சென்டம் கடுமையாக சரிந்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ்-26, தாவரவியல், வேதியியல் தலா 1 பேர் என மொத்தம் 28 பேர் மட்டுமே சென்டம் எடுத்துள்ளனர்.கணிதத்தில் கடந்தாண்டு 29 மாணவர்கள் சென்டம் எடுத்தனர்.

இந்தாண்டு புதுச்சேரி காரைக்காலில் ஒரு மாணவர் கூட கணிதத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கவில்லை. எனவே பொறியியல் படிப்புகளில் இந்தாண்டு 4 சதவீதம் வரை கட் ஆப் குறைய வாய்ப்புள்ளது.இந்தாண்டும் ஆன்-லைன்கடந்த 2018-19ம் கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டெக்., உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் ஆன்-லைன் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. விண்ணப்ப பதிவுகளும் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டும் அதேபோன்று ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.விண்ணப்பம் எப்போதுபிளஸ் 2 ரிசல்ட் வெளியானதும் எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்புவோருக்கும் சென்டாக் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டு அறிவிப்பு வெளியிடும் சென்டாக் தற்போது மவுனமாக உள்ளது.இது குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறும்போது 'நீட்' தேர்வு முடிவு வெளியானதும் ஆன்-லைனில் சென்டாக் விண்ணப்பத்தை வினியோகிக்க முடிவு செய்துள்ளோம். எனவே இரண்டு வாரங்கள் கழித்து முறைப்படி விண்ணப்ப அறிவிப்பு வெளியாகும் என்றனர்