. -->

Now Online

FLASH NEWS


Tuesday 9 April 2019

8 லட்சத்து 88 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு



பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினார்கள்.

கடந்த ஆண்டு வரை 1,200 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வு, இந்த ஆண்டு முதல் 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது. அதனால், மொழிப்பாடங்கள் முதல் தாள், 2-ம் தாள் என்று நடத்தப்படாமல், ஒரே தாள் தேர்வாக நடத்தப்பட்டது.

புதிய நடைமுறையில் (600 மதிப்பெண்) 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவ-மாணவிகளும், பழைய நடைமுறையில் (1,200 மதிப்பெண்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். மேலும், புதிய நடைமுறையில் 1,144 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதினர்.

திருத்தும் பணி நிறைவு

தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 40 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.

இனி மாணவ-மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கப்பட இருக்கிறது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

ஏற்கனவே, அறிவிக்கப்பட்டது போல, இம்மாதம் 19-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவை வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிளஸ்-1 தேர்வு

இதேபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், 5 ஆயிரத்து 32 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 பேர் எழுதினார்கள்.

இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று முதல் தொடங்கி உள்ளன. அடுத்த மாதம் (மே) 8-ந்தேதி பிளஸ்-1 தேர்வு முடிவை வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.