. -->

Now Online

FLASH NEWS


Friday 5 April 2019

ஏரோனாடிக்கல் எஞ்ஜினியரிங் எங்கு படிக்கலாம் ?

பிளஸ் 2 முடித்திருக்கும் மாணவ, மாணவிகள் ஏரோனாடிக்கல் எஞ்ஜினியரிங் படிக்க விரும்பினால் எங்கு படிக்கலாம், எதிர்காலம் உள்ளதா என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….

அறிவியலின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று விமானம்…போக்குவரத்து, ராணுவம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளிலும் விமானங்களின் தேவை புதிய பரிமாணங்களில் அதிகரித்து வருகிறது.

விமானங்களுடைய செயல்பாடு, உருவாக்கம், ஆராய்ச்சி தொடர்பான படிப்புதான் ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினியரிங்…

இந்த துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டவர்களுக்கு வளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. படித்து முடித்த உடனே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த துறையை தவிர்த்து விடுவதே நல்லது.

படிப்பு முடிந்த உடன் உரிய நிறுனங்களில் சேர்ந்து முறையான பயிற்சி பெற்று, தொழில்நுட்பங்களை கற்றறிந்தால் மட்டுமே இதில் ஜொலிக்க முடியும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 80 பொறியியல் கல்லூரிகளில் ஏரோனாடிக்கல் படிப்புகள் உள்ளன. இது தவிர சில தனியார் பல்கலைக்கழகங்களிலும் இந்த படிப்பு கற்றுத்தரப்படுகிறது.

மற்ற பொறியியல் படிப்புகளைப் போலவே இதுவும் 4 ஆண்டு காலம் கொண்டது. இதற்கு நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது. அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் சேர்பவர்களுக்கு ஆண்டு கட்டணமாக 36 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுத்து, சென்னை குரோம்பேட்டை எம்ஐடியில் சேரும் முதல் 7 மாணவர்களுக்கு 4 ஆண்டு கட்டணத்தையும் செலுத்தி, 100 சதவீத வேலைவாய்ப்பையும் டிஆர்டிஒ வழங்குகிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த படிப்பை தேர்வு செய்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.

ஏரோநாட்டிக்கல் படித்து முடித்தவர்களுக்கு நாசா, டிஆர்டிஒ, இஸ்ரோ, பிஎச்இஎல், பிடிஎல், போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் ராணுவ தளவாட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளதால், இந்த துறையில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

ஆளில்லா விமானங்களின் தேவை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கண்காணிப்பு, ஏர் டேக்சி, உணவுப் பொருட்கள் டெலிவரி போன்ற சேவைகளில் ஆளில்லா விமானங்களின் தேவை இன்னும் சில ஆண்டுகளில் அதிகரிக்கும் என்பதால், வேலைவாய்ப்பும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த படிப்பில் சேர்பவர்களுக்கு கற்பனை திறனும், மன உறுதியும் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம். ஆங்கில வழியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தான் இந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் சிவன் போன்ற பல பேர் சாதாரண குக்கிராமத்தில் இருந்து வந்து, தமிழ் வழியில் படித்து, இந்த துறையில் சாதனை படைத்திருக்கிறார்கள்.

எனவே ஆராய்ச்சி பற்றிய ஆர்வம் இருக்க வேண்டியது முக்கியம். இந்த படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதி நன்றாக உள்ள கல்லூரிகளையே தேர்வு செய்ய வேண்டும் என்பதும் மிக மிக முக்கியம்…