. -->

Now Online

FLASH NEWS


Wednesday 24 April 2019

பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து பேச வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு..



புதுக்கோட்டை,ஏப்.24: பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் பள்ளியின் தேர்ச்சி பற்றிய விவரங்களை நேரடியாக தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்   என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா கேட்டுக் கொண்டார்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையில் அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: மாணவர்களுக்கு தேவையான புத்தகம்,நோட்டுகள்,சீரூடைகள் ஆகியவற்றை உரிய தேதியில் பெற்று பாதுகாப்பாக வைத்து மீண்டும் பள்ளி திறப்பு நாளான ஜீன்3-ந்தேதியன்று பள்ளித்திறந்த முதல்நாளன்றே முதல் பாடவேளையில் மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள் வழங்க வேண்டும்.பள்ளியின் மராமத்து பணிகளான குடிநீர்வசதி,கழிவறை வசதிகள்,கட்டிட பழுது பார்ப்பு பணிகளை விடுமுறை நாட்களில் செய்துமுடிக்க வேண்டும்.பள்ளியைத் தரம் உயர்த்துதல் ,தேர்வு மையம் கோருதல்,புதிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல்,பள்ளியில் ஆங்கில வழி கல் வி வகுப்புகள் துவக்க  அனுமதி கோரி உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 2019-2020 கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் அது தொடர்பான பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை தயார்படுத்த வேண்டும்.அனைத்து உயர் ,மேல்நிலைப் பள்ளிகளிலும் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு மைய குழு ஏற்படுத்த வேண்டும். இரண்டு ஆண் ஆசிரியர்கள்,இரண்டு பெண் ஆசிரியர்கள்,இரண்டு பெற்றோர்கள்,இரண்டு மாணவர்கள்,இரண்டு மாணவியர்கள் அடங்கிய குழு அமைத்து  அறிக்கையினை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் பள்ளியின் தேர்ச்சி பற்றிய விவரங்களை நேரடியாக தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என தலைமையாசிரியர்களை கேட்டுக் கொண்டார்.

பின்னர் நடைபெற்ற  வட்டார கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:2019-2020 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 1 முதல் நடைபெற்று வருகிறது.ஆசிரியர்கள் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், அதிக மாணவர்கள் சேர்ப்பதின்வாயிலாக ஆசிரியர்களை உபரி பணியிடங்களாக கருதப்படுவதை தவிர்க்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 84 நடுநிலைப் பள்ளிகளில் அரசு அனுமதியின்படி ஆங்கில வழிக் கல்வி எல்.கே.ஜி முதல் யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இப்பள்ளிகள் மீது தனிக்கவனம் எடுத்து அப்பள்ளியை வட்டாரக்கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு மாணவர் சேர்க்கையை மேம்படுத்த வேண்டும்.பள்ளி ஆண்டாய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளவனா என்பதை வட்டாரக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்தல் வேண்டும்.2019-2020 ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இப்பாடங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள கேட்டிட வேண்டும்.மாணவர்களுக்கு தேவையான விலையில்லா புத்தகம் ,நோட்டு,சீருடைகள் ,புத்தகப்பை காலணிகள் மற்றும் வண்ண கிரையான்கள் ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து பெற்று வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்து பள்ளிகளுக்கு வழங்கி பள்ளி மீண்டும் திறக்கும் நாளான ஜீன் 3 ஆம் தேதி முதல் பாடவேளையே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்..தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் விடுமுறை நாட்களில் இயங்காமலும் உரிய அனுமதி பெறப்பட்டு பள்ளி நடைபெறுகிறதா என்பதை உறுதிபடுத்திட வேண்டும்.நர்சரி பள்ளிகளின் செயல்பாடுகள் தொடர்பான மாதாந்திர அறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் அமுதா ,வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு ,அரசு உதவி பெறும் உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.