. -->

Now Online

FLASH NEWS


Saturday 18 May 2019

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்1 மதிப்பெண் பட்டியல் அவசியம்

கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்1 மதிப்பெண் பட்டியல் அவசியம் என கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
பிளஸ்-2 படிப்புக்குப் பின்னர் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், பெரும்பாலானவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் அது தொடர்பான பாடங்களில் சேர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான விண்ணப்ப விநியோகம் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் முடிவு பெற்றுள்ளது. தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் அரசுக் கல்லூரிகளில் வருகிற 29-ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளில் விளையாட்டு, முன்னுரிமை கொண்டவர்களுக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தொடர்ந்து, பாடப் பிரிவுகள் வாரியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
கடந்த காலங்களில் கல்லூரி சேர்க்கைக்கு மாணவர்களின் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டு வந்தது. முன்பு1,200 மதிப்பெண்களுக்கு எழுதப்பட்ட பிளஸ்2 பொதுத் தேர்வு தற்போது 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ்1 தேர்வும் பொதுத் தேர்வாக மாறி உள்ளது. இதனால், பிளஸ்1 வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே கல்லூரியில் சேர முடியும் என்ற உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.
எனவே, தற்போது நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்கள் பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழுடன், பிளஸ்1 மதிப்பெண் சான்றிதழையும் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. பிளஸ்1 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே கல்லூரியில் படிக்க முடியும் என்பதால் இந்த மதிப்பெண் சான்றிதழ் மிகவும் அவசியம் என்றும், இதனை கலந்தாய்வின்போது எடுத்து வர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.