. -->

Now Online

FLASH NEWS


Thursday 2 May 2019

பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க, வியாழக்கிழமை (மே 2) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு www.tneaonline.in அல்லது www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே, விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரம் நடத்துகிறது.

இதுவரை இந்தக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தப் பொறுப்பு 2019-20ஆம் கல்வியாண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத அல்லது வசதி இல்லாத மாணவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வு உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். அவ்வாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும். இதுதொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள 044 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.


தயார் நிலையில் இணையதளம்: பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான வலைதளம் www.tneaonline.in இன்னும் தயாராக இல்லை என செய்தி வெளியாகியுள்ளது. இது தவறான செய்தி. வலைதளம் நல்ல முறையில் இயங்கி வருகிறது. 
எனவே, மாணவர்கள் விண்ணப்பத்தை மே 2-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விண்ணப்பம் பதிவு செய்வதற்கு என்னென்ன விவரங்கள் தயார்படுத்தி வைத்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் வருமாறு:-

* இணையதள முகவரிக்கு உள்ளே சென்றதும் மாணவர்கள் முதலில் உள்நுழைவு ஐ.டி. மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு மாணவர்கள் தங்கள் பெயர், ஊர், முகவரி, கல்வி நிலை விவரம் (8 முதல் 12-ம் வகுப்பு வரை), பெற்றோர் பற்றிய விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

* மாணவர்களுக்கு செல்போன் எண், சுய மின்னஞ்சல் முகவரி அவசியம். அந்த எண், மின்னஞ்சல் முகவரிக்குத்தான் ரேண்டம் எண், தரவரிசை பட்டியல், கலந்தாய்வுக்கான நாள் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.

* தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும். எவ்வித சான்றிதழையும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வெளிமாநில மாணவர்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

* முன்னாள் ராணுவத்தினரின் மகன் மற்றும் மகள், விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளி என்றால் அதற்குரிய சிறப்பு சான்றிதழ் கட்டாயம். பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் அவசியம். விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய தனிச்சான்று அவசியம். அப்போது தான் அவர்கள் உதவித்தொகை பெற முடியும்.

* பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.250-ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

* அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும். இந்த பணி அரசின் 42 சேவை மையங்களில் மட்டுமே நடைபெறும். அப்போது விண்ணப்ப பதிவு மேற்கொண்ட அனைவரும் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களின் சான்றிதழ்களை சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* ஜூன் 17-ந்தேதி தரவரிசை பட்டியல் www.tneaonline.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும். தரவரிசை பட்டியலின்படி, ஜூலை 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். மாணவர்களின் தரவரிசை எண்ணிக்கைக்கு ஏற்ப எந்த தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் செய்தி அனுப்பப்படும்.

* மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூன் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும். இது சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் நேரடியாக நடைபெறும்.

* பொதுப்பிரிவு மாணவர்கள் நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இணையதள வழி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.