. -->

Now Online

FLASH NEWS


Sunday 30 June 2019

TRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல்









தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி  உயர்வில் சிக்கல் எழுந்துள்ளது.


தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் பரிந்துரைகளுடன் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்படி 1.1.2019 அன்றுள்ளபடி அரசு  மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 155  பேரும், முதுகலை பாட ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ெமாழி ஆசிரியர்கள் 545 பேரும் இடம்பெற்றுள்ளனர். 



இந்த பட்டியல் அனைத்து அரசு உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிட  வேண்டும். தகுதி இல்லாதவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த விபரத்தையும் வரும் 26ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.


இதில் ஆசிரியர்  தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தர அல்லது வரிசை எண் இல்லாத நிலையில் அவர்களின் பதவி உயர்வு முற்றிலும் கிடைக்கப்பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது பதவி உயர்வில் அவர்களுக்கு சிக்கலை  ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களின் மனுக்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் முதுகலை ஆசிரியர் பதவியில் பணி வரன்முறை செய்யப்பட்ட நாளின்படி, தர அல்லது வரிசை எண், ஆண்டு ஆகிய விபரத்தை  ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து கேட்டு தற்போதைய நிலையில் பெற்று அனுப்பி வைக்க வேண்டும். 



குறிப்பிட்ட நாளுக்குள் இதனை வழங்கும் நிலையில் மட்டுமே அவர்களின் தர வரிசை எண்ணுக்கு ஏற்ப முன்னுரிமை மாற்றி அமைக்க  பரிசீலிக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பான ஆதாரம் இல்லாமல் முறையீடு செய்தால் அது பரிசீலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரத்துடன் வழங்கப்படும் முறையீடுகளை உடனே முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் பள்ளி  கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் வழங்கியுள்ள உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளார்.