. -->

Now Online

FLASH NEWS


Thursday 29 August 2019

'ஓய்வூதிய விதிகள் எதுவுமே இல்லை' தகவல் சட்டத்தில் தமிழக அரசு ஒப்புதல்




பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் அளிப்பது குறித்து, விதிகள் உருவாக்கப்படவில்லை' என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்துள்ளது. தமிழகத்தில், 2003 ஏப்., 1க்கு பின், பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்பின், பணியில் சேர்ந்த, 5 லட்சத்து, 42 ஆயிரம் அரசு ஊழியர்களில், ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது, இறந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆசிரியர் ஏங்கல்ஸ் கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு அரசு அளித்த பதில்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் வழங்குவது குறித்த விதிகள் உருவாக்கப்படவில்லை. பணிக்கொடை வழங்குவது குறித்தும், பங்களிப்பு தொகையை, 2019 ஏப்., 1 முதல், 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்தி வழங்குவது குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஏங்கல்ஸ் கூறியதாவது:

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, அறிக்கையை அரசிடம் வழங்கி, 10 மாதங்கள் ஆகின்றன. அரசு எந்த முடிவும் எடுக்காமல், காலம் தாழ்த்துவது, அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அளித்த வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.