அப்துல் கலாம் போல லட்சியம்
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவைச் சுற்றிப் பார்க்கப் போகிறார் மதுரை பள்ளி மாணவி ஜே.தான்யா தஸ்னம். இந்தியாவிலிருந்து இந்த வாய்ப்பைப் பெற்ற மூன்று பள்ளி மாணவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவைச் சுற்றிப் பார்க்கப் போகிறார் மதுரை பள்ளி மாணவி ஜே.தான்யா தஸ்னம். இந்தியாவிலிருந்து இந்த வாய்ப்பைப் பெற்ற மூன்று பள்ளி மாணவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டீ கடைக்காரர் மகள்: மதுரையில் உள்ள மகாத்மா மான்டிஸரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் தான்யா தஸ்னம். இவருடைய தந்தை ஜாபர் உசேன் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். தான்யாவின் தாய் சிக்கந்தர் ஜாபர், அவர் (தான்யா) படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
சிறு வயது முதலே படிப்பில் சிறந்து விளங்கி வரும் அவர், ஒன்பதாம் வகுப்பில் 500-க்கு 450 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். அறிவியல்தான் அவருக்குப் பிடித்த பாடம்.
இணையதளம் மூலம் நடத்தப்படும் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றதன் மூலமே, இந்த அரிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது. இவருடன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சாய் புஜிதா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அலிபக் ஆகியோரும் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்கா சென்று, நாஸாவில் ஒரு வாரம் தங்கியிருந்து ஆய்வகத்தைச் சுற்றிப் பார்ப்பதோடு, அங்கிருக்கும் விஞ்ஞானிகளுடனும் கலந்துரையாட உள்ளனர்.
இவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் www.go4guru.com இணையதள தலைமைச் செயல் அதிகாரி காயம்பூ ராமலிங்கம், விண்ணில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்று வந்த நாஸாவின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரர் டான் தாமஸ் ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர்.
விஞ்ஞானி ஆவதே லட்சியம்:
நாஸா வாய்ப்பைப் பெற்றது குறித்து மாணவி தான்யா தஸ்னம் கூறியது:
இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் மூன்று பேரில் ஒருவராக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு எனது பள்ளியும், பள்ளியின் முதல்வரும் நிர்வாக இயக்குநருமான பிரேமலதா பன்னீர்செல்வமும் அளித்த ஊக்கமே காரணம்.
அறிவியல்தான் எனக்குப் பிடித்த பாடம். அறிவியல், விண்வெளி அறிவியல் சார்ந்த கட்டுரைகளை நிறைய படிப்பேன். இதன் மூலம் இந்தப் போட்டியிலும் எளிதாக வெற்றிபெற முடிந்தது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான் எனது உத்வேகம். அவரைப்போல விஞ்ஞானி ஆவதே எனது லட்சியம். நாஸா பயணம் அதற்கு மேலும் ஊக்கமளிக்கும் என நம்புகிறேன் என்றார் அவர்.