. -->

Now Online

FLASH NEWS


Thursday 29 August 2019

வருமான வரி கட்டணத்தில் புதிய மாற்றங்கள்: கொண்டாட்டமும், திண்டாட்டமும்


வருமான வரி கட்டணத்தில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட வரி தொடர்பான பணிக்குழு தீவிரமான ஆய்வுகளை செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

சமீப காலமாக பொருளாதார தேக்க நிலையாலும், அதீத வரி விதிப்பாலும் பல தொழில்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அதனால் வரி விகிதத்தை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட உள்ளது.

தற்போது வரை வரி வசூல் விகிதங்கள்:

2.50 லட்சத்திற்கு குறைவான வருமானம் - வரி கிடையாது
2.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை - 5% வரி
5 லட்சம் முதல் 10 லட்சம் வரை - 20% வரி
10 லட்சத்திற்கு மேல் - 30% வரி

தற்போது இந்திய பொருளாதாரத்தில் சிறு நிறுவனங்களே 10 லட்சம் ஈட்டும் நிலையில் இருப்பதால் 10 லட்சம் ஈடுபவருக்கும் 10 கோடி ஈட்டுபவருக்கும் ஒரே வரி விகிதத்தை அமல்படுத்துவது சரியாக இருக்காது என அந்த அறிக்கையில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. எனவே 10 லட்சம் வரை அதிக பட்ச வருமானம் என்னும் பழைய பட்டியலை மாற்றி 2 கோடியை அதிக வருமானமாக கொண்டு புதிய பட்டியலை தயாரித்துள்ளனர். அந்த பட்டியலின் படி,

2.5 லட்சம் வருமானம் - வரி கிடையாது
2.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை - 10% வரி
10 லட்சம் முதல் 20 லட்சம் வரை - 20% வரி
20 லட்சம் முதல் 2 கோடி வரை - 30% வரி
2 கோடிக்கு மேல் - 35% வரி

இந்த புதிய வரி விதிப்பால் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10% வரி குறைந்தாலும், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வருமானம் பெறும் நபர்களுக்கு 5% வரி கூடியிருக்கிறது. அதுபோல 10 லட்சத்திற்கும் மேல் 30% வரி செலுத்தி கொண்டிருந்தவர்கள் இனி 20% செலுத்தினால் போதும். இந்த புதிய வரி விகித குறைப்பு மற்றும் மாற்றங்களால் பல இடைநிலை நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி பெறும் என கூறப்படுகிறது. அதேசமயம் முதல் நிலை மற்றும் கடைசி நிலை நிறுவனங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய வரி விதிப்பால் பெரிய நிறுவனங்களுக்கு கூட லாபம் கிடைக்காது. கிடைக்கும் லாபத்தில் முக்கால்வாசியை வரியாகவே கட்டிவிடும் சூழல் நேர்ந்தால் யாருக்கும் நிறுவனம் தொடங்கவே எண்ணம் வராது என்று பலர் கூறிவருகின்றனர். ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி விதிப்பால் நொந்து போய் உள்ள நிறுவனங்கள் இந்த வருமான வரி சதவீத உயர்வால் மேலும் பாதிப்படையக்கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.