. -->

Now Online

FLASH NEWS


Monday 9 September 2019

தினக்கூலியைவிட குறைவாக ஊதியம் பெறும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்



12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்த வேண்டும்  என்று தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பாடங்களில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ம் ஆண்டு நியமித்தார்.
விதிமுறைகளின்படி பகுதிநேரம் என்பது வாரத்திற்கு 3 அரைநாட்கள் என மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணிபுரிய வேண்டும் என்பதாகும்.
நான்கு பள்ளிகளிலே இதே அடிப்படையில் பணிவழங்கப்பட்டால் இப்பகுதிநேரப்பணி முழுநேரமாக முழுமையடையும்.
எனவே 9 கல்வி ஆண்டுகளாக பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை அரசாணையில் ஆணையிட்டுள்ளபடி நான்கு பள்ளிகளில் பணியமர்த்தி அதிகபட்ச சம்பளத்திற்கு புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லை என்றால் ஒரே பள்ளியில் அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரமாக பணிவழங்க வேண்டும்.
இப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம் ஒருங்கிணைந்த கல்வி என மாறிவிட்டது. பள்ளிகளும் ஒரே அலகின்கீழ் ஒருங்கிணைப்பட்டு வருகிறது. எனவே இதனை கல்வித்துறை அதிகாரிகளும் கல்விஅமைச்சரும் முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி நடைமுறைப்படுத்தவேண்டும்.
மத்திய அரசு ஊதிய சட்டத்தை சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது. மேலும் தற்போது சமவேலை சமஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் நிரந்தர ஊழியர்களுக்கும் அதே வேலையை செய்யும் தற்காலிக ஊழியர்களுக்கம் ஒரே சம்பளம் தரவேண்டும். பகுதிநேர ஆசிரியர்களாக நாங்கள் இத்திட்ட வேலையில் பணியமர்த்தப்பட்டு இருந்தாலும் இதே பாடங்களில் நிரந்தரப்பிரிவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை எங்களுக்கும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள நிலையில் எங்களுக்கு போனஸ் தரவில்லை. இறந்தவர்கள் குடும்பங்களுக்கும் 58 வயதால் பணிஓய்வில் சென்றவர்களுக்கும் அரசின் நிதிஉதவி இல்லை. ஆண்டு வாரியாக ஊதியஉயர்வு சரிவர தரப்படவில்லை. 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத சம்பளஉயர்வும் தரவில்லை.

 வருங்கால வைப்புநிதி, இன்ஷீரன்ஸ் எதுவும் இல்லை. மகப்பேறு கால விடுப்பு மற்றும் இதர விடுப்பு சலுகைகளும் இல்லை. ஆந்திரா மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கு தரும் ரூ.14203 அதிகமான சம்பளமும் தமிழத்தில் தரவில்லை. ஒட்டுமொத்தத்தில் அரசின் பணபலன்களை பெறமுடியாமல் தற்போது தரப்படும் ரூ.7ஆயிரத்து 700 குறைந்த தொகுப்பூதியத்தில் ஏறிவிட்ட விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல்  வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடுகிறோம்.
 எனவே தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் தற்போது பணியிலுள்ள 12 ஆயிரம் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பணிநிரந்தரம் வழங்கி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி அனைவருக்கும் கல்வி இயக்க திட்டவேலையில் பணியமர்த்தியதை நிரந்தரப் பணியிடங்களாக்கி புதிய அரசாணையிட்டு அவரவர் பாடங்களில் சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இங்ஙனம்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர்  9487257203