. -->

Now Online

FLASH NEWS


Saturday 5 October 2019

குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேச்சு:



புதுக்கோட்டை,செப்.5 :ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையின் படியும் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மேல்நிலை,உயர்நிலைப் பள்ளியினை குறுவளமையமாக கொண்டு ஒன்றிய அளவில் தொடக்க ,நடுநிலை,உயர்நிலைப் பள்ளிகளை இணைத்து புதிய குறுவளமையமாக மாற்றி அமைக்கப்பட்டதை தொடர்ந்து குறுவளமைய தலைமைஆசிரியர்கள் ,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொறுப்பு) குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோருக்கு கல்வி மேம்பாட்டு பணியினை மேற்கொள்ளுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசியதாவது: பள்ளிகல்வி முதன்மைச் செயலர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர்,பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோர் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மேல் உள்ள  நம்பிக்கையின் காரணமாக  குறுவள மையங்கள் ஏற்படுத்தி  தொடக்கப்பள்ளி முதல்  மேல்நிலைப்பள்ளி  வரை ஒன்றாக இணைத்துள்ளார்கள்.எனவே குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பள்ளியின் கீழ் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை உருவாக்கிட வேண்டும்.குறுவளமைய மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், குறுவளமைய மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து அந்தந்த குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கும்,மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும் பாடுபடவேண்டும். மேலும்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துவகைப்பள்ளிகளிலும் டெங்கு வராமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் என் வீட்டிற்கும்,தெருவிற்கும்,பள்ளிக்கும் நான் ஒரு தூய்மை தூதுவர் என எழுதி வழங்கப்பட்டுள்ள மாதிரி  அட்டையில் வகுப்புவாரியாக ஒவ்வொரு மாணவரின் புகைப்படத்தினை ஒட்டி அதில் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் கையொப்பம் இட்டு கொடுக்க வேண்டும்.பின்பு மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்,ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம் என உறுதிமொழி எடுக்கச் செய்து மாணவர்களைக்கொண்டே அப்பகுதியில் தீவிர டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும்.மேலும் தற்பொழுது மழைக்காலம் என்பதால் பள்ளியிலும்,சுற்றுப்புறத்திலும் கொசுக்கள் உருவாகமால் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் எஸ்.இராகவன்,எஸ்.இராஜேந்திரன்,கு.திராவிடச் செல்வம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட  உதவிதிட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம்,பள்ளித் துணை ஆய்வாளர்கள் கி.வேலுச்சாமி,ஜெயராமன்,செல்வம்,மற்றும் குறுவள மைய தலைமை ஆசிரியர்கள்,வட்டாரக் கல்வி அலுவலர்கள்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொறுப்பு), குறுவள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.