. -->

Now Online

FLASH NEWS


Sunday 3 November 2019

ஆசிரியர்களின் சிறு இடர்ப்பாடுகளையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.. கல்வி அமைச்சர் செங்கோட்டையன்







ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் ஏழை, எளியோர் இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்தகங்கள், பேருந்து பயண அட்டை, மிதிவண்டிகள், மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.53 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.37 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த கல்வியாளரை உருவாக்கும் உயரிய பொறுப்பு ஆசிரியர்களையே சாரும். அதே வேளையில், ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு முழுமையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 300 பள்ளித் தலைமை ஆசியரியர்கள், தேர்ச்சி வழங்கிய 2,200 ஆசிரியர்கள் என 2,500 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.