சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு அறிவியல் ஆசிரியையாக சங்கீதா பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை பள்ளியில் பிரார்த்தனை நடந்தபோது தலைமையாசிரியை கீதாஞ்சலி, ஆசிரியை சங்கீதாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சங்கீதா பள்ளி ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை சக ஆசிரியர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது ஆசிரியை சங்கீதா விரைந்து சாலையை கடந்து செல்ல கூறியதாகவும், இதில் ஒரு மாணவர் சாலையில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் கூறியதும் ஆசிரியை சங்கீதாவை, தலைமையாசிரியை திட்டியதாகவும், இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
Source: Dinakaran