. -->

Now Online

FLASH NEWS


Friday 8 November 2019

தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு பாஸ் மதிப்பெண் போட்ட ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அதிரடியாக ரத்து




இப்போது தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, அரசு ஆசிரியர் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாகவும் தனியார் பயிற்சி பள்ளி மூலமாகவும் வழங்கப்படுகிறது . இதில் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு அதிக வரவேற்பு இல்லாததால் இந்த பயிற்சியினை படிக்க மாணவர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. மிகவும் குறைந்த அளவில் தான் மாணவர்கள் சேர்ந்து கற்று வருகின்ற நிலை உள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். ஆசிரியர் தகுத்தேர்வினை (டெட்) எழுதி தேர்ச்சி பெற்றால் தான் அரசு தொடக்கப்பள்ளிகளில் வேலை பார்க்க முடியும் என்ற நிலை கடந்த 8 ஆண்டுகளாக உள்ளது.



அவ்வாறு ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும். இப்படியிருக்க .கடந்த2017-18 கல்வி ஆண்டில் தேர்வு எழுதிய 4 ஆயிரம் மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது கல்வித்துறையில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது . எல்லா மாணவர்களும் எப்படி தேர்ச்சி பெற முடியும் விடைத்தாள் திருத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பணம் வாங்கி கொண்டு அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைத்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது .



இதையடுத்து விடைத்தாள்கள் மீண்டும் திருத்தப்பட்டன. தேர்வுத்துறை இயக்குனராக இருந்த வசுந்தரா தேவி உத்தரவின் பேரில் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு மீண்டும் திருத்தப்பட்டதில் மதிப்பெண் வித்தியாசம் இருந்தது கண்டறியப்பட்டது . ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற 50 மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் 38, 40, 42 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 50 மதிப்பெண் போட்டு தேர்ச்சி அடைய செய்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து விடைத்தாள் திருத்தம் செய்த 300 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தாங்கள் செய்தது தவறு என்று விளக்க கடிதம் அளித்துள்ளனர் . இதில் 250 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்களும் 50 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்களும் உள்ளடங்கியிருக்கிறார்கள் . 17-பி பிரிவின் படி உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கம் கேட்டு பெறப்பட்ட கடிதத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே 17-பி, பிரிவின் கீழ் 300 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. அதன்படி அவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து செய்தல் மற்றும் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது