. -->

Now Online

FLASH NEWS


Saturday 30 November 2019

அரசு ஆரம்பப்பள்ளியை தத்தெடுத்து புனரமைப்பு


அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் வந்து விட்டால் போதும் தலைவர் பிறந்த நாள் நிதி என வசூலில் ஈடுபட்டு ஊரெங்கும் பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்து, ஒலிபெருக்கியை அலற விட்டு, போஸ்டர்களை ஒட்டி, பிறருக்கு இடையூறு ஏற்படுத்தி, மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு அத்துமீறல்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக மதுரையில் ரஜினியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியை தத்தெடுத்து, பள்ளி கட்டடத்தை புனரமைத்து புதுப்பொலிவுடன் பராமரித்து வருகின்றனர். இவர்களின் ஒப்பற்ற சேவை பிறருக்கு பாடமாக அமைய வேண்டும், என திருப்பரங்குன்றம் மக்கள் பாராட்டுகின்றனர்.தலைமை ஆசிரியை ஜான்பவுலின் கூறியதாவது: இப்பள்ளி 1981 - 82 கல்வியாண்டில் துவக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு வந்தன. எனினும், வர்ணம் பூசாமல், கட்டடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து காணப்பட்டது. ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலர் பள்ளி கட்டடத்துக்கு வர்ணம் பூசி, கட்டடத்தில் புனரமைப்பு பணிகளை செய்து முடித்தனர். சரவணன் எம்.எல்.ஏ., பள்ளி முன் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றி நர்சரி கார்டன் அமைத்து கொடுத்தார், என்றார்.ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணை செயலாளர்கள் அழகர்சாமி, பால்பாண்டி கூறியதாவது: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு வர்ணம் பூசி, புனரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என மக்கள் கேட்டு கொண்டனர். உடனே ஒப்புக் கொண்டோம். எங்களது சேவையில் நிர்வாகிகள் சரவணன், பாலா இணைந்தனர். நால்வரும் சேர்ந்து சொந்த நிதி ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் பள்ளியை புதுப்பித்தோம். இதற்கான விழா டிச.,2ல் நடக்கிறது. அன்று பள்ளி குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கவுள்ளோம், என்றனர்.