. -->

Now Online

FLASH NEWS


Tuesday 3 December 2019

ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அரசு பள்ளி மாணவர்கள்!


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட காளாச்சேரி எனும் ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காளாச்சேரி மேற்குப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பல்வேறு விருதுகளை பெற்ற மாணவர்களை கொண்ட பள்ளி என்பது இந்தப் பள்ளிக்கு உரிய தனி சிறப்பாகும்.
  


குறிப்பாக பள்ளி மாணவிகள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் அவலங்கள் குறித்து இந்தப் பள்ளி மாணவி எழுதிய சிறப்பு கட்டுரை மத்திய அரசின் சிறப்பு விருதைப் பெற்றுள்ளது. இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்தப் பள்ளி மாணவர்கள் குறிப்பாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் நாம் ஒரு தலைப்பை கொடுத்தால் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகின்றனர் என்பது ஆச்சரியமூட்டும் விஷயமாக உள்ளது.
  


உதாரணத்திற்கு தமிழில் பெயர்ச்சொல் வினைச்சொல் என்று பல்வேறு வகையான வாக்கியங்கள் உள்ளன. இதனை ஆங்கிலத்தில் பார்ட் ஆப் ஸ்பீச் என்று கூறுவார்கள். அதாவது நவுன், புரோநௌன், அப்ஜக்டிவ் உள்ளிட்டவை ஆகும். இந்த மாணவர்களிடம் தமிழில் ஒரு வாக்கியத்தை கூறி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்ல வேண்டுமென்று சொன்னால் உடனடியாக சொல்கிறார்கள்.மேலும் ஏதாவது ஒரு தலைப்பை கொடுத்து ஆங்கிலத்தில் பேச சொன்னால் சிறு பிழைகளோடு மட்டுமே தைரியமாக தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இவை அத்தனைக்கும் காரணம் இந்தப் பள்ளியில் ஆங்கில வகுப்பு ஆசிரியர் ஆனந்த். இவர் மூலமாக இந்தப் பள்ளி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண அடித்தட்டு மக்கள் விவசாய தொழிலாளர்கள் வாழும் கிராமத்தில் அவர்களது பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமையை தேடித்தந்துள்ளது