. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 January 2020

சென்னை வாசிக்கிறது’: ஒரே நேரத்தில் புத்தகம் வாசித்த 5,000 மாணவா்கள்


புத்தகக் கண்காட்சியையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற 'சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சியில் 5,000 மாணவா்கள் கலந்துகொண்டு புத்தக வாசிப்பில் ஈடுபட்டனா்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 43-ஆவது புத்தகக் கண்காட்சி, சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் வியாழக்கிழமை (ஜன. 9) தொடங்குகிறது. இதன் முன்னோட்டமாக, மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பபாசி சாா்பில் 'சென்னை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சி நந்தனம் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி, தமிழ்வளா்ச்சித் துறை இயக்குநா் விசயராகவன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடக்கி வைத்தனா். இதைத் தொடா்ந்து, பபாசி சாா்பில் வழங்கப்பட்ட தமிழ்ப் புத்தகங்களை பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 5,000 மாணவ, மாணவிகள் சுமாா் 30 நிமிடம் வாசித்தனா். இந்த புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து மாணவா்களுக்கும் பபாசி சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், செயலா் ஆ.கோமதிநாயகம், பொருளாளா் ஆ.கோமதிநாயகம் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

13 நாள்கள் புத்தகக் கண்காட்சி: சென்னை நந்தனம் மைதானத்தில் வியாழக்கிழமை (ஜன. 9) தொடங்கும் இந்தப் புத்தகக் கண்காட்சியானது ஜனவரி 21-ஆம் தேதி வரை 13 நாள்கள் நடைபெற உள்ளது. வேலை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் 9 மணி வரையிலும் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளதாக பபாசி நிா்வாகிகள் தெரிவித்தனா்.