தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக குரூப்-4 தேர்வு புதிய தரவரிசை பட்டியலில் 39 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பட்டியலில் இடம்பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய டி.என்.பி.எஸ்.சி. உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் குரூப்-4 தேர்வு நடந்தது. தேர்வு முடிவு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
அந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்று இருந்தவர்களில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தி, தவறு நடந்து இருப்பதை உறுதி செய்தது.தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 பேரை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தகுதிநீக்கம் செய்து, அவர்களுக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடையும் டி.என்.பி.எஸ்.சி. விதித்தது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்ததால், இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. எந்த பதிலும் தெரிவிக்காமலேயே இருந்தது. இதனால் பல ஆண்டுகள் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி தேர்வான தேர்வர்கள் பரிதவிப்பில் இருந்து வந்தனர்.இந்த நிலையில் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்று தகுதிநீக்கம் செய்யப்பட்ட 39 பேருக்கு பதிலாக அதற்கு அடுத்த நிலையில் தகுதிவாய்ந்த 39 பேரை தரவரிசை பட்டியலில் இணைத்து இருப்பதாக அறிவித்தது.இந்த அறிவிப்பின் மூலம் குரூப்-4 தேர்வு ரத்து ஆகுமா? என்று வெளிவந்த பல்வேறு தகவல்களுக்கு டி.என்.பி. எஸ்.சி. முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.இந்த குரூப்-4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்காக புதிய தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் தங்களுடைய சான்றிதழ்களை அவரவர் மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையங்களில் சென்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வருகிற 7-ந் தேதி கடைசி நாள் என்றும், சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம், தேதி குறித்த விவரம் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாகவும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.