செய்முறை தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வு பணிகளுக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தவிர்க்கப்படுகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இம்மாத இறுதி வரை, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு களுக்கு செய்முறை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுகளை கண்காணிக்கும் பணி, அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு நேர சந்தேகங்களை நிவர்த்தி செய்யக்கூட அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு இணையான அளவில், தனியார் பள்ளிகளும், மாணவர்களும் உள்ளனர். கடந்த காலங்களில், அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களும், தனியார் பள்ளி மையங்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களும் தேர்வுப்பணிக்கு அனுப்பப்பட்டு வந்தனர். தற்போது, தனியார் பள்ளி, அரசு பள்ளி என அனைத்துக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள், தங்களது மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் பணியில் நிம்மதியாக ஈடுபட்டு வருகின்றனர். இரு மடங்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணி வழங்கப்படுவதால், மாணவர்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும் வழியில்லாத நிலை உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளுக்கு சாதகமான நிலையே உள்ளது. பொதுத்தேர்வு பணிகளுக்கும், இதே நிலையை பின்பற்றினால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.