. -->

Now Online

FLASH NEWS


Monday 23 March 2020

பார்வைத்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ரூ.1 கோடியில் நவீன வகுப்பறைகள்

பார்வைத்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று முன் தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்விற்காக இவ்வரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு, முழுமையான மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஆரம்ப நிலையில் குறைபாட்டினை கட்டுப்படுத்துதல், சிறப்புக்கல்வி மற்றும் மறுவாழ்வு சிகிச்சைக்கான பயிற்சியளித்தல், உதவி உபகரணங்கள் வழங்குதல், ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இந்த சேவைகளை வழங்குவதற்காக மத்திய அரசின் உதவியுடன் ஒருங்கிணைந்த மண்டல மறுவாழ்வு மையம் மதுரை மாவட்டம் யா.புதுப்பட்டியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும்.

மனநல காப்பகத்தில் 700 பேர் குணமடைந்தனர்

சென்னையில் மனநல காப்பகம் கீழ்ப்பாக்கத்தில் செயல்படுகிறது. தற்சமயம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 53 மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனைகளில், இல்லங்களில் சுமார் 700 குணமடைந்தோர் தங்கியுள்ளனர். இவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைப்பதற்கு முன்பாக, இடைநிலை பராமரிப்பு இல்லங்களில் சேர்த்து, சமுதாயத்தில் ஒருங்கிணைப்பதற்கான பயிற்சிகள் அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே தலா ரூ.40.10 லட்சம் செலவில் மதுரை, ராமநாதபுரம், திருச்சி, வேலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் ரூ.2.52 கோடி செலவில் நிறுவப்படும். இதனால் 700 குணமடைந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் பயன் அடைவார்கள். இத்திட்டம் மனநலக் காப்பகம், சென்னை மேற்பார்வையில், தகுதிவாய்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.

பார்வை குறைபாடுடைய திறனாளிகளின் கல்வி வளர்ச்சிக்கு இவ்வரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது சிறப்புக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரெய்லி எழுத்து வடிவில் உள்ள பாடபுத்தகங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இவர்களின் கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் வகையில் சாதாரண எழுத்துகள் கொண்ட புத்தகங்கள் மற்றும் கணினியின் மூலம் பெறப்படும் எழுத்து மூலம் பெறக்கூடிய தகவல்களை பிரெய்லி எழுத்துக்களாக மாற்றி வாசிக்க உதவும் கருவியினை ரூ.35,000 மதிப்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 200 மாணவர்களுக்கு ரூ.70 லட்சம் செலவில் வழங்கப்படும்.

ரூ.1 கோடியில் நவீன வகுப்புகள்

பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு சிறப்பு பள்ளிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பிரெய்லி முறையில் கல்வியினை வழங்குவதற்காக நவீன வகுப்புகள் 12 பள்ளிகளில் துவக்கப்படும். இங்கு சாதாரண முறையில் உள்ள அச்சு எழுத்துகள் ஒலி மற்றும் பிரெய்லி எழுத்துதொடு உணர்வுடன் கூடிய தொழில் நுட்பத்துடன் அமைந்த உபகரணங்களை கொண்டு இவ்வகுப்புகள் பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளிகள் மற்றும் திட்டம் மூலம் அமைந்த பள்ளிகளில் தலா ரூ.9 லட்சம் செலவில் மொத்தம் ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த சுய வேலைவாய்பை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. இவை சாதாரண தையல் இயந்திரங்கள் ஆகும். 2020-2021-ஆம் நிதியாண்டிலிருந்து பூத்தையல் வசதியுடன் கூடிய திறன் உயர்த்தப்பட்ட தையல் இயந்திரங்கள் ரூ.11,000 செலவில் 3,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.3.30 கோடியில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் மாற்றுத் திறனாளிகளின் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தப்படும்.

தற்போது சட்டம் பயின்ற பட்டதாரி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சட்டப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளவும், வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொள்ளவும் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவ்வுதவித்தொகை ரூ.10,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 15 சட்டம் பயின்ற பட்டதாரி மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர்.

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் இவ்வரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியில் தனித்துவம் பெற்ற நிறுவனத்தின் உதவியுடன், தனியார் நிறுவனத்தின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாற்றுத்திறனாளிகளின் திறனை பயிற்சி மூலம் மேம்படுத்தியும் மாவட்டந்தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். இத்திட்டம் ரூ.1.39 கோடி நிதிஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

ரூ.1 கோடியில் கவனிப்பாளர் பயிற்சி

விருதுநகர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகக் கட்டடங்கள் மிகவும் பழுதான நிலையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த தடையற்ற சூழலுடன் இல்லை. மாவட்ட ஆட்சியர் விருதுநகர், அலுவலக கட்டடம் கட்ட 50 சென்ட் நிலத்தினை சுரை குண்டு கிராமத்திலும், மாவட்ட ஆட்சியர் விழுப்புரம் 30 சென்ட் நிலத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் ஒதுக்கீடு செய்துள்ளனர். இவ்வலுவலகங்கள், முறையே ரூ.1 கோடி செலவில், மாற்றுத்திறனாளிகளுக்கான உகந்த தடையற்ற சூழல் வசதியுடன் கட்டப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.2 கோடியாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய திட்டங்கள் மற்றும் ஆணைகள் பிறப்பிப்பது அரசின் கடமையாகும். அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அவர்களின் அன்றாட பணிகள் மற்றும் பணியிட சிறப்பு தேவைகளுக்காக தனிப்பட்ட உதவிகள் சேவை உருவாக்குவது அவசியமாகிறது. எனவே, இவர்களுக்கு தனிப்பட்ட உதவிகள் சேவை அமைக்க ரூ.1 கோடியில் நிதியம் உருவாக்கப்படும். இந்நிதியம் மூலம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் முதற்கட்டமாக 200 நபர்களுக்கு கவனிப்பாளர் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் பயிற்சி பெற்ற கவனிப்பாளர் மற்றும் தனிப்பட்ட உதவிகள் சேவை தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்கள் தனிப்பட்ட உதவிகள் சேவை பதிவேட்டில் பராமரிக்கப்படும். இவர்களை இணைக்கும் பாலமாக இப்பதிவேடு அமையும். இப்பதிவேடு ஒருங்கிணைப்பாளரால் செயல்படுத்தப்படும். மேலும் கிராமப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இவ்வகையான சேவைகளை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அரசு அலுவலகங்களி்ல் மாற்று திறனாளிகளுக்கு வசதிகள்

பொதுமக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த தடையற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது. இதற்கென அரசு முன்னுரிமை அடிப்படையில் செயல்திட்டம் வகுக்க வேண்டும். 2020–2021ம் நிதியாண்டில், முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் அதிகம் வந்து செல்லும் அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்கள் (93), வட்டாட்சியர் அலுவலகங்கள் (312) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் (385) ஆக மொத்தம் 790 கட்டடங்கள் ரூ.4.74 கோடி செலவில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் தணிக்கை செய்யப்படும். தணிக்கை அறிக்கை கட்டட உரிமையாளர் துறைக்கு, கட்டட பராமரிப்பு துறைக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் துறை நிதி மூலம் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுக்கு இணையாக கலாச்சார வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளில் பங்கேற்கும் உரிமையினை பாதுகாக்கவும் மற்றும் ஊக்குவிக்கும் நோக்கிலும் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்படும் 200 சுற்றுலாத் தலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையில்லா உள் கட்டமைப்பு உருவாக்கத்திற்கான தணிக்கை பணிகள் ரூ.1.20 கோடி செலவில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்படும். தணிக்கையில் சுட்டிக் காட்டப்படும் மாற்றங்கள், சுற்றுலாத்தலங்களின் உரிமையாளர் துறைகள் மூலம் அவர்களது துறைநிதி மூலம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா அறிவித்தார்.