வீடுகளில் இருக்கும் மாணவர்கள், தங்கள் பாடத் திட்டங்களை வீட்டில் இருந்தே, டிஜிட்டல் முறையில் படிக்க, மத்திய அரசு, நான்கு அலைபேசி செயலிகளை பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை:கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, ஏப்., 14ம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே மாணவர்கள், டிஜிட்டல் முறையில் தங்கள் கல்வித்திட்ட பாடங்களை படித்து, அறிவைவளர்த்துக் கொள்ள, மத்திய அரசு, நான்கு அலைபேசி செயலிகளை பரிந்துரை செய்துள்ளது. இவற்றை, கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.ஸ்டேட் போர்டு பள்ளி மாணவர்களுக்கு, திக்ஷா செயலி, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இபத்ஷாலா, கலை மற்றும் அறிவியல், பொறியியல் என, அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில், ஸ்வயம் மற்றும், ஸ்வயம் பிரபா ஆகிய, இரண்டு செயலிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன; நான்கு செயலிகளுமே, மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
செயலிகளில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பாடத் திட்ட புத்தகங்கள், பிடிஎப்., வடிவில் உள்ளன. மாணவர்கள்,புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். பாடங்களை, வீடியோ, ஆடியோ மூலம் கற்க, அனிமேஷன் மற்றும் செய்தி வாசிப்பது போல வீடியோக்கள், செயலியில் சேர்க்கப்பட்டு உள்ளன. செயலிகள் குறித்து, பல்வேறு தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள், குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மூலம், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
நன்றி: தினமலர்