. -->

Now Online

FLASH NEWS


Thursday 21 May 2020

2 வயதில் கடத்தப்பட்டவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் இணைந்தார் - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்





பீஜிங், சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி. இவர்களின் மகன் மாவோ யின். கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி மாவோ ஜென்ஜிங் தனது 2 வயது மகன் மாவோ யின்னை வீட்டில் இருந்து மழலையர் பள்ளிக்கு அழைத்து சென்றார்.செல்லும் வழியில் மாவோ யின் தனக்கு தாகமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து, மாவோ ஜென்ஜிங் அவனை அருகில் இருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அப்போது மாவோ யின் திடீரென மாயமானான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. பின்னர் அவன் குழந்தை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டது தெரியவந்தது.தனது ஒரே மகன் தொலைந்து விட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மாவோ யின்னின் தாய் லி ஜிங்ஷி, தான் பார்த்து வந்த வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு மகனை தேடும் பணியில் முழு வீச்சில் இறங்கினர். நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு பயணம் செய்து, தனது மகன் பற்றிய விவரங்கள் அடங்கிய 1 லட்சம் நோட்டீசுகளை வழங்கினார். ஆனாலும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டவில்லை.கடந்த 2007-ம் ஆண்டு ‘குழந்தையே வீட்டுக்கு திரும்பி வா’ என்கிற பெயரில் லி ஜிங்ஷி தன்னார்வ தொண்டு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மகனை தேடினார். இந்த அமைப்பின் மூலம் குடும்பத்தை பிரிந்த 29 சிறுவர்கள் தங்களின் குடும்பத்துடன் இணைந்தனர். ஆனால் லி ஜிங்ஷிங்குக்கு தனது மகன் கிடைக்கவில்லை.ஆனாலும் சற்றும் சோர்வடையாத லி ஜிங்ஷி விடா முயற்சியுடன் தனது குழந்தையை தேடிவந்தார்.
இதனிடேயே மாவோ யின், சிச்சுவான் மாகாணத்தில் இருப்பதாக கடந்த மாதம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்த அவரை தேடி கண்டுபிடித்த போலீசார் அவருக்கு மரபணு பரிசோதனை செய்தனர். இதில் அவர் மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி தம்பதியின் மகன்தான் என்பது உறுதியானது. இதையடுத்து 32 ஆண்டுகளுக்கு பின்பு அவர் தனது பெற்றோருடன் இணைந்தார்.